பி.ஜே.பி.க்கும், காங்கிரஸுக்கும் வித்தியாசமே இல்லை! ரெண்டும் ஒரே லட்சணம்தான்..! தெறிக்கவிட்ட அ.தி.மு.க. வி.ஐ.பி.! அடங்காத மர்மம் ?

By Vishnu PriyaFirst Published Jan 6, 2019, 12:22 PM IST
Highlights

இந்த தடவை தம்பிதுரைக்கு எம்.பி. தேர்தல்ல சீட் கொடுக்காதீங்க, எங்களுக்கு எதிரா ரொம்ப ஓவரா பேசுறார். மீறி சீட் கொடுத்தா நாங்களே அவரோட தோல்விக்கு காரணமா இருக்க வேண்டியிருக்கும்.’ என்று தமிழக பி.ஜே.பி. புள்ளி ஒருவர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களிடம் அழுத்தமாக, எச்சரிக்கை தொனியில் பேசியிருந்த தகவல் தெரிய வந்திருக்கிறது.

’மத்திய அரசுக்கு நாங்கள் ஒன்றும் அடிமைகளில்லை! அடிமை சாசனமும் எழுதிக் கொடுக்கவில்லை.’ பேரவையில் இப்படி பொங்கி எழுந்தார் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகரான பொள்ளாச்சி. ஜெயராமன். இது பி.ஜே.பி.க்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. 

ஏற்கனவே மக்களவை துணை சபாநாயகரான தம்பிதுரை, திடீர் திடீரென மத்திய அரசுக்கு மண்டகப்படி நடத்துவதும், பின் மடங்கிப் போவதும் தொடர் கதையாய் இருக்கிறது. இதைப் பற்றி ‘அடிக்கடி அந்நியனாகும் தம்பிதுரை’ என்று ஏஸியாநெட் தமிழ் இணையதளம் தனி கட்டுரையே வெளியிட்டிருந்தது. நாடாளுமன்ற துணை சபாநாயகரைப் பார்த்து தமிழக சட்டமன்ற துணை சபாநாயகரும் கொதிக்க துவங்கியிருப்பது, வித்தியாசமான மற்றும் ஆச்சரியமான தொடர்புச் சம்பவங்களாகவும் பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், சமீபத்தில் டெல்லியில் மத்தியரசை தாறுமாறாக புரட்டியெடுத்த தம்பிதுரை...”காவிரி விவகாரத்தை வைத்துப் பார்த்தோம்னா, காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. ரெண்டுக்கும் வித்தியாசமேயில்லை. ரெண்டு கட்சியுமே கர்நாடகாவுடைய நலனைத்தான் பார்க்குது.” என்றவரிடம், தமிழக செய்தியாளர் ஒருவர் ‘என்ன தலைவரே விளாசிட்டீங்க!?’ என்று கேட்டதும், ”இருக்குற லட்சணத்தைத்தானே சொன்னேன். ரெண்டு கட்சியும் ஒண்ணுதான் காவிரி பிரச்னையில. இதைச் சொல்றதுல எனக்கென்ன பயம்? கர்நாடகாவுல காங்கிரஸோட கூட்டணி ஆட்சிதானே நடக்குது! ராகுலும் ஸ்டாலினும் இப்போ ஒண்ணுக்குள்ளே ஒண்ணுன்னு ஆகிட்டாங்க இல்லையா! ஸ்டாலின் போயி சொல்ல வேண்டிதானே தன்னோட நண்பன் ராகுல்ட்ட...’மேகதாதுவில் அணை கட்ட வேண்டாமுன்னு குமாரசாமிட்ட சொல்லுங்க.’ன்னு. அதைச் செய்ய ஸ்டாலினுக்கு அக்கறை இருக்குதான்னு பார்ப்போம்!” என்று பொளந்து கட்டிவிட்டார். 
 
தம்பிதுரையின் பாய்ச்சலை காங்கிரஸ் மற்றும் தி.மு.க. இரண்டும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், ’நம்ம கூடவே இருந்துக்கிட்டு, நம்மோட ஆசீர்வாதத்துல தமிழ்நாட்டுல ஆட்சியை ஓட்டுற அ.தி.மு.க.வை சேர்ந்த தம்பிதுரை இப்படி நம்மை காங்கிரஸோட சேர்த்து வெச்சு பேசுனது மட்டமான விமர்சனம்.’ என்று பொங்கியிருக்கிறது பி.ஜே.பி. 

ஏன் இப்படி தம்பிதுரை தங்களை தொடந்து தாக்குகிறார்? என்று டெல்லி லாபி ஸ்கேன் செய்து பார்த்தபோது...’இந்த தடவை தம்பிதுரைக்கு எம்.பி. தேர்தல்ல சீட் கொடுக்காதீங்க, எங்களுக்கு எதிரா ரொம்ப ஓவரா பேசுறார். மீறி சீட் கொடுத்தா நாங்களே அவரோட தோல்விக்கு காரணமா இருக்க வேண்டியிருக்கும்.’ என்று தமிழக பி.ஜே.பி. புள்ளி ஒருவர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களிடம் அழுத்தமாக, எச்சரிக்கை தொனியில் பேசியிருந்த தகவல் தெரிய வந்திருக்கிறது. இது தம்பியின் காதுகளுக்குப் போக, செம்ம டென்ஷன் ஆனவர் தனக்கு பிரஷர் ஏறும்போதெல்லாம் இப்படி பி.ஜே.பி.யை போட்டு வறுக்கும் விஷயம் தெரியவந்திருக்கிறது.

click me!