புதியக் கல்விக்கொள்கையின் ஆபத்தை எச்சரிக்கும் ஆசிரியர்கள்..!! குலகல்வி முறைக்கு அடித்தளம் என கொந்தளிப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 24, 2020, 10:13 AM IST
Highlights

கல்விசாலைகள்  தொழிலாளிகளை உருவாக்கும் தொழிற்சாலையாக மாறிவிடக்கூடும்,மும்மொழிக் கொள்கை, குறிப்பாக கிராமப்புறக் குழந்தைகளிடம் படிப்பின் ஆர்வத்தை குறைக்கும் என்பதால்  இருமொழிக்கொள்கை தொடரவேண்டும்.
  

புதியக்கல்விக்கொள்கை -2020 மூலம் பள்ளிக்கூடங்கள் எல்லாம் தொழிலாளிகளை உற்பத்திசெய்யும் தொழில்கூடங்களாக மாறும் அபாயம் உள்ளதால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- புதியக்கல்விக்கொள்கை 2020 அமுல்படுத்துவதற்குமுன் ஆசிரியர்களின் கருத்துகளை கேட்டறியும் வகையில் ஆகஸ்டு 31 ந்தேதி வரை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கிய மத்திய அரசுக்கும் , மத்தியக் கல்வி அமைச்சகத்திற்கும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது. நாட்டின் எதிர்காலம் கருதி  முன்னேற்றப்பாதையில் வழிநடத்தி செல்ல அடிப்படை அவசியம் கல்வியில் மாற்றம் தேவையென்பதையறிந்து 34 ஆண்டு களுக்கு பிறகு  புதியக் கல்விக்  கொள்கை அறிமுகப் படுத்திருப்பது வரவேற்புக்குரியது. மேலும் புதியக்கல்விக்கொள்கையில் பல மாற்றங்கள் வரவேற்புக்குரியது. அதில் ஒரு சில மாற்றங்களில் சமதர்மம் சமூகநீதி மறுக்கப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியதாக உள்ளது. 

ஆகையினால் அக்கருத்தினை மறுபரிசீலனை செய்து அனைத்துத்தரப்பினருக்கும் ஏற்றவகையில் சமூகநீதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதைத் தவிர்த்திடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றோம்.  இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்குவது, ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழி வழிக்கல்வி, இடைநிற்றலாகிப்போன 2 கோடி மாணவர்களுக்கு மீண்டும் கல்வி வழங்குவது, உள்ளிட்டவைகள் வரவேற்புக்குரியதாகும். ஆனால் கீழ்வரும் கருத்துகளை மறுபரிசீலனை செய்ய ஆவனசெய்யும்படி வேண்டு கின்றோம். 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு  பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்பது பிஞ்சுகளிடத்தில் நஞ்சுப்பாய்ச்சுவதாகும். மேலும் அரசுப்பள்ளிகளை மூடும்நிலைக்கு தள்ளும், கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்கல்வியே தொடர முடியாத நிலை ஏற்படும்,6 ஆம் வகுப்பிலே தொழில்கல்வி என்பது மீண்டும் குலகல்வி முறைக்கு போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.14 வயது வரை குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சட்டம் நடைமுறையிலிருக்கும்போதே கல்வி போர்வையில்  கல்விசாலைகள்  தொழிலாளிகளை உருவாக்கும் தொழிற்சாலையாக மாறிவிடக்கூடும்,மும்மொழிக் கொள்கை, குறிப்பாக கிராமப்புறக் குழந்தைகளிடம் படிப்பின் ஆர்வத்தை குறைக்கும் என்பதால்  இருமொழிக்கொள்கை தொடரவேண்டும்.

   

ஆசிரியர் பணிகளுக்கு போட்டித்தேர்வுகளுக்கு பிறகும் நேர்முகத்தேர்வு என்பது அவசியமற்றது, அது முறைகேடுகளை ஊக்குவிக்கும், ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் கல்வி நிலைய உயர்பதவிக்கு திறமை ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள்  என்பது  இனி சாதி ரீதியாக வேண்டியவர்கள் வசதிவாய்ப்புள்ளவர்கள் தான் உயர்பதவிக்கு வரமுடியும் என்ற நிலை உருவாகும். பணிமூப்பு அடிப்படையே தொடரவேண்டும், அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரை தன்னாட்சி வழங்குவது நல்லது, ஆனால், தனியார் கல்லூரிகள் பல்கலைக்கழகத்திடம் இணைப்பு பெற்று அவற்றின் மேற்பார்வையில் செயல்படாவிட்டால் முறைகேடுகளுக்கு வித்திடுவதாகும், போலிச்சான்றிதழ்கள் புற்றீசல் போன்று புறப்படும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழக இளங்கலை மாணவர் சேர்க்கைகளுக்கு பொது நுழைவுத்தேர்வு என்பது  கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு  கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படும், இதனால் கல்லூரி படிப்பும் கனவாகிப்போகும்  நிலை உள்ளது. இளங்கலை படிப்புக்கு நுழைவுத்தேர்வு தேசியஅளவில் என்பது ஏற்புடையதல்ல, மொத்தத்தில் நுழைவுத்தேர்வு கூடாது, 

பட்டபடிப்பில் விரும்பும்போது நின்றுவிட்டு பிறகு தொடரலாம் என்பது தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை மாணவர்களிடையே குறைக்கும், கட்டாயம் தாய்மொழிக்கல்வி 10 ஆம் வகுப்புவரை நீட்டிக்கவேண்டும், கல்வி மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவந்தால் தான் மாநில சூழலுக் கேற்ப கல்வி, கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம், வீரம், விவேகம், மாவட்டச்செய்திகள், தட்பவெப்பநிலைகளை உள்ளடங்கியக் கல்வி வடிவமைக்கமுடியும். மாநில உரிமைகள் நிலைநாட்டமுடியும். மேலும், சமதர்மம், சமூகநீதி காத்திடும்வகையில் மேற்கண்டக்கருத்துகளை பரிசீலித்து  புதியக்கல்விக்கொள்கை அமுல்படுத்த ஆவனசெய்யும்படி  மத்தியகல்வி அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!