
தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் நடத்திய சோதனையில் 14,232 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டிபிடுத்து அழித்துள்ளனர். கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் தளங்களுடன் கூடிய முழு ஊரடங்கானது அமலில் இருந்து வருகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட சில விஷமிகள் கள்ளத்தனமாக மதுபானங்கள், கள்ள ச்சாராயம், சுண்டக்கஞ்சி ஆகியவற்றை கூடுதல் விலைக்கு மது பிரியர்களுக்கு விற்று வருகின்றனர்.
இதனை கட்டுப்படுத்துவதற்காக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ஆபரேஷன் விண்டு என்று பெயரிடப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள மலை பகுதிகளில் தீவிர சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். கடந்த 15 நாட்களாக மேற்கொண்ட சோதனையில் தமிழகம் முழுவதும் தடைச்செய்யப்பட்ட கள்ளச்சாராயம், மதுபானம், சாராய ஊறல்கள் விற்றதாக 232 வழக்குகள் பதிவு செய்தனர். விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி மலையில் 3 ஆயிரத்து 300 லிட்டர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2, 200 லிட்டர், வேலூர் மாவட்டத்தில் 1800 லிட்டர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 1100 லிட்டர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1200 லிட்டர், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2200 லிட்டர் என மொத்தம் 14,232 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 2210 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும் 2757 மதுபான பாட்டில்களும், 14505 வெளிமாநில மதுபாட்டில்களும் கைப்பற்றப்பட்டது. தடைசெய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் பொதுமக்கள் 10581 மற்றும் 94984 10581 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தமிழக காவல்துறை கேட்டுகொண்டுள்ளது.