
உத்திரபிரதேச மாநில தேர்தல் முடிவுக்குப் பின்னர் பாஜக தேசிய தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி படையெடுக்க உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் டெல்லி ராஜகோபாலன் கூறியுள்ளார். திரவிடியன் ஸ்டாக் என்பதை 2024 கண்டிப்பாக பாஜக தலைவர்கள் உலுக்கிப் பார்ப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் காலூன்ற பாஜக பல ஆண்டுகளாக முயன்று வரும் நிலையில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சிக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் தனித்துப் போட்டியிட்டு பாஜக சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் மட்டும் 19 வார்டுகளில் அதிமுக அவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது பாஜகவுக்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகவே கருதப்படுகிறது. இது அதிமுகவின் வெற்றிடத்தை பாஜக கைப்பற்றி விட்டதோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் பாஜக தனித்துப் போட்டியிட்டு மொத்தம் 309 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இது முந்தைய தேர்தலை காட்டிலும் அதிகம். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் மட்டும் 11 வார்டுகளை கைப்பற்றியுள்ளது.
சென்னையில் 8.4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது பாஜக, இன்னும் கூடுதல் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் இன்னும் கூடுதல் வெற்றிகளை பெற்றிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. தற்போது பாஜகவின் இந்த வெற்றி பாஜக தலைமைக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே உத்தரப்பிரதேசம் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு அக்கட்சியின் தேசியத் தலைவர்கள் முழுக்கமுழுக்க தமிழகத்தை குறிவைத்து களமிறங்குவார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் எதிர்வரும் 2014 நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து இனி பாஜக தேசியத் தலைவர்கள் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா பொன்றோர் அடிக்கடி தமிழகம் வர வாய்ப்பு இருக்கிறது என்றும், டெல்லி மூத்த பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் கூறியுள்ளார். மேலும் வட இந்தியாவில் தேர்தலை அணுகுவதைபோல பாஜக தமிழகத்திற்கும் வியூகம் அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்திரபிரதேசம், அங்கு வெற்றி பெறுகிற கட்சியே மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்க முடியும், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு உத்தரபிரதேச மாநில வெற்றியே பெரும் துணையாக இருந்து வருகிறது, மோடி ஆட்சி மத்தியில் மேலும் தொடரவேண்டும் என்றால் உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும். அந்த முனைப்பில் தான் பாஜக தலைவர்கள் அங்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஒருவேளை அங்கு பாஜக தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் நிச்சயம் அது தமிழக தேர்தலில் அதிக கவனம் செலுத்தியாக வேண்டும் என்ற நிர்பந்தம் உள்ளது. பாஜகவுக்கு தமிழகத்தில் பெரிய அளவிலான வெற்றி வாய்ப்புகள் இல்லை என்றாலும் அதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும், அப்படி நடந்தால் மட்டுமே அது மத்தியில் மோடி ஆட்சி தொடர்வதற்கு உறுதுணையாக அமையும்.
இதனால் உத்தரப் பிரதேச மாநில தேர்தலுக்கு பிறகு, ஒட்டுமொத்த பாஜக தலைவர்களின் கவனமும் தமிழகத்தின் மீது திரும்பும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்நிலையில் பாஜக தலைவர்கள் அதற்கான நடவடிக்கைகளை எப்படி எடுக்க உள்ளனர் என்பது குறித்து டெல்லி ராஜகோபாலன் பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பாஜக தலைவர்கள் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை தொடர்ந்து தமிழகத்திற்கு படையெடுக்க உள்ளனர். நிச்சயம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைவர்கள் திராவிடன் ஸ்டாக்கை ஒரு உலுக்கு உலுக்கி விடுவார்கள், திரிபுரா மாடல், வெஸ்ட் பெங்கால் மாடல் போன்று தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த உள்ளனர்.
மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் அமித்ஷா அவர்கள் தமிழகத்தில் ஓர் இரவு தங்க உள்ளார். பாஜக தலைவர்கள் எப்போது எங்கு சென்றாலும் உடனே டெல்லி திரும்பி விடுவார்கள். ஆனால் அமித்ஷா அவர்கள் சென்னையில் ஒரு இரவு தங்க உள்ளது அது அரசியல் திருப்பு முனையாக அமையும். அதைத்தொடர்ந்து ராஜ்நாத்சிங் அவர்கள் ஏப்ரல் மாதம் கோயம்புத்தூர் வர உள்ளார்.
அதைத் தொடர்ந்து மதுரைக்கு ஸ்மிருதி இரானி வரஉள்ளார். அவரைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேலூரில் வடஆற்காடு மாவட்டத்திற்கு வர இருக்கிறார். இது அனைத்திற்கும் மேலாக வரும் செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விவேகானந்தர் மண்டபத்தில் ஓர் இரவு தங்கி அங்கு தியானம் மேற்கொள்ள இருக்கிறார். கன்னியாகுமரி என்பது பாஜகவின் கோட்டையாக மாறி விட்டது. அதனால் எங்கெல்லாம் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அந்த இடங்களுக்கெல்லாம் அவர்கள் அடுத்த அடுத்து பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
அதேபோல் மீண்டும் கோயம்புத்தூரை நாம் மீட்டெடுக்க வேண்டுமென பாஜக களமிறங்க உள்ளது. எனவே வரும் டிசம்பர் மாதம் வரைக்கும் தலைவர்களின் பயணம் குறித்த அட்டவணை போடப்பட்டு விட்டது. அதேபோல் இதுவரை தமிழகத்தில் 56 பேரிடம் மோடி மன்கி பாத்தில் உரையாடி இருக்கிறார். அந்த 56 பேரையும் அடிக்கடி அழைத்து நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். இது பிரதமர் மோடியின் ஒரு வியூகம். நிச்சயம் பாஜக தமிழகத்தில் கணிசமாக இடங்களில் வெல்லும் இவ்வாறு அவர் கூறினார்.