"எடப்பாடி ஆட்சி கவிழ்வதற்கான தொடக்கம்" - எச்சரிக்கும் தமிழருவி மணியன்!!

First Published Aug 17, 2017, 3:42 PM IST
Highlights
tamilzharuvi maniyan warning edappadi


காந்திய மக்கள் இயக்க மாநாட்டு முடிவில் எடப்பாடி ஆட்சி கவிழ்வதற்கான அரசியல் திருப்புமுனை தொடங்க உள்ளதாக தமிழருவி மணியன் கூறியுள்ளார். மேலும், நடிகர் ரஜினி அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்து ஊழலின் ஆணிவேரை அறுத்தெறிவதற்கு உறுதி பூண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார், அதில்,

"பொது வாழ்வின் புனிதத்தை பாழ்படுத்தி, ஊழலுக்கு அன்றாடம் உற்சவம் நடத்தி, மக்கள் நலன் சார்ந்த அரசியலை இழிந்த தொழிலாக உருமாற்றி, அரசியல் அமைப்பு முறையை முற்றாக அழுகும் நிலைக்கு மாற்றிவிட்ட திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவிக்கும் வேள்வியில் காந்திய மக்கள் இயக்கம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளதாக அதில் கூறியுள்ளார்.

ஆட்சியில் அமர்ந்திருக்கும் எடப்பாடி அமைச்சரவை உட்கட்சி குழப்பங்களால், கோட்டையில் இருந்து வெளி தள்ளப்படுவதற்கான நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்றும், இந்த ஆட்சி நீடிக்கும் ஒவ்வொரு கணமும் தமிழக நலனுக்கு எதிரானது என்ற உணர்வு மக்கள் மனங்களில் ஆழமாக பதிந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஊழல் மலிந்த ஆட்சி முறையைப் பார்த்து மனம் சலித்து கிடக்கும் மக்கள் அரசியல் அரங்கில் நல்ல மாற்றம் ஒன்று நிகழாதா என்றும் நம்மை இரட்சிக்கும் ஒரு நல்ல தலைமை வந்து வாய்க்காதா? என்று ஏங்கி தவமிருக்கும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்து ஊழலின் ஆணிவேரை அறுத்தெறிவதற்கு உறுதி பூண்டிருப்பதாகவும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினியின் அரசிய்ல பிரவேசம் ஏன் அவசியம்? என்றும் அவரால் தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் நிகழக் கூடுமா? என்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் தரும் வகையில், ஆகஸ்டு 20 ஆம் தேதி அன்று திருச்சி, உழவர் சந்தை திடலில் மாபெரும் மக்கள் திரள் மாநாட்டை நடத்த உள்ளது.

இந்த மாநாட்டில், ரஜினியை உயிருக்கு உயிராய் நேசிக்கும் நெஞ்சங்களும், ஆரோக்கியமான அரசியல் மாற்றத்தை விரும்பும் அறிவார்ந்த பொது மக்களும் திரளாக கலந்து கொள்ள உள்ளனர் என்றும், மாநாட்டின் முடிவில் இருந்து எடப்பாடி ஆட்சி கவிழ்வதற்கான அரசியல் திருப்புமுனை தொடங்க உள்ளதாகவும் தமிழருவி மணியன்". இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

click me!