தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது, அந்த ஆலையின் முதல் யூனிட்டை மூட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 100 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியான போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், மே 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது உலக அளவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது.
தமிழகம் மட்டும்ல்லாமல் பெங்களூரு, லண்டன் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் நேற்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
துப்பாக்கி சூடு சம்பவம் ஆளும் அதிமுகவுக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது. இது தொடர்பாக முதலமைச்சர், துணை முதலமைச்சர், டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் ஆளுநருடன் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து தூத்துக்குடி மாவ்டட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் மற்றும் குடிநீர்சேவைகள் துண்டிக்கப்பட்டன.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகை மூட தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளதாக ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மும்பை பங்குச் சந்தைக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 23ம் தேதி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டித்ததோடு, ஆலையின் முதல் அலகை மூடுமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அரசின் இந்த நடவடிக்கை முதல் வெற்றி என்றாலும், இது வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என தூத்துக்குடி மக்கள் தெரிவித்துள்ளனர்.