
தமிழ்நாட்டு போலீஸ் பல்லை பிடுங்கிய பாம்பு போன்றது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரை ஒவ்வொரு மாதமும் வெளியிடுவோம். ஆவினில் ஊழல் குறித்து நான் சொன்னதும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் ஊழல் இல்லை என விளக்கம் கொடுத்தார். அப்படி இருக்கையில் எதற்காக சுகாதார செயலரை மாற்றியுள்ளார்? அமைச்சர்கள் கையை வெட்டிருவேன், காலை வெட்டிருவேன், சுலுக்கு எடுத்துருவேன், ரவுடி போன்ற பேச்சுகளை பேசுகின்றனர். அடுப்புக்கறி பாத்திரங்களை பார்த்து நீ கருப்பு என சொல்வது போல, அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக தொண்டர்களை பார்த்து குண்டர்கள் எனக் கூறுகிறார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 7 லாக்கப் மரணங்களை தாண்டிவிட்டது. சாத்தான்குளம் விவகாரத்தை அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் உள்ளிட்டோர் அதனை அரசியல் நிகழ்ச்சியாக மாற்றினர். ஆனால், இப்போது திமுக ஆட்சியில் அடுத்தடுத்து லாக்கப் மரணங்கள், கூட்டு பலாத்காரம், சாலையில் வெட்டுவது போன்ற செயல்கள் நடப்பது அரசின் செயலின்மையை காட்டுகிறது. தமிழக போலீஸ் ஒரு பல் பிடுங்கப்பட்ட பாம்பாக உள்ளது.
இதில் திமுகவின் அரசியல் தலையீடு தான் முதலில் சரி செய்யப்பட வேண்டியது. முதல்வர் அடிக்கடி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஆய்வு செய்கிறார். ஆனால் அவர் போலீஸ் ஸ்டேஷன் செல்ல செல்ல தான் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. காவல்துறைக்கு ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த ஆணையத்தின் நிலை என்ன, போலீசாரின் பணிச்சுமையை குறைக்க என்ன திட்டம் எடுத்துள்ளது? அதிகாரிகளை பணிமாற்றம் செய்வதால் காவல்துறை மாறாது என்று தெரிவித்தார்.