TN Assembly : துணைவேந்தர் நியமனம் மசோதா... மாநில அரசை ஆளுநர் மதிப்பதில்லை: சட்டசபையில் ஸ்டாலின் ஆவேசம்

By Ajmal KhanFirst Published Apr 25, 2022, 12:23 PM IST
Highlights

மாநில பல்கலைக்கழகங்களில், மாநில அரசே துணைவேந்தரை நியமிக்க ஏதுவாக பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.  இந்த சட்டமுன்வடிவிற்கு அறிமுக நிலையிலேயே அதிமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து  வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனம்

தமிழ்நாட்டில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்டமசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். குஜராத்,தெலங்கானவில் அம்மாநிலங்களின் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் அந்த மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், கர்நாடகாவிலும் அந்த மாநில அரசின் ஒப்புதலுடன் துணைவேந்தர் நியமனம் நடைபெற்று வருகிறது, அதேபோல் தமிழ்நாட்டிலும் மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள அரசு முடிவு செய்து அதற்கான சட்டமுன்வடிவைத் தாக்கல் செய்வதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அதிமுக அறிமுக நிலையிலேயே எதிர்ப்பு

ஏற்கனவே ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அனைத்து மாநில பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தரை நியமிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநரே நியமித்து வரும் நிலையில், அந்த அதிகாரத்தை அரசுக்கு மாற்றும் சட்ட மசோதாவை நிறைவேற்றி அதை ஆளுநரின் ஒப்புதலுக்கே தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. முன்னதாக இந்த சட்ட மசோதாவுக்கு அதிமுக அறிமுக நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது.  அதே நேரத்தில் பாஜக இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் நடவடிக்கை

தொடர்ந்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. உயர் கல்வி அளிப்பது இந்த பல்கலைக்கழகங்கள் வரலாற்று சிறப்பு மிக்க பணிகளை செய்து வருகிறது.இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக ஆளுநரும்,  இணை வேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரும் உள்ளனர். கொள்கை முடிவின்படி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமிக்கக் கூடிய அதிகாரம் தமிழக அரசிற்கு இல்லாமல் இருப்பது உயர் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலந்து ஆலோசித்து ஆளுநர் துணைவேந்தரை நியமிப்பது மரபாக உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளாக பல்கலைக்கழக துணைவேந்தராக ஆளுநர் தனக்கு பிரத்தியோகமாக உரிமை உள்ளது போல்  செயல்பட்டு உயர்கல்வி பொறுப்பு அளிக்க வேண்டிய மாநில அரசை மதிக்காமல் செயல்படும் வரும் போக்கு தலைதூக்கியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியால் அதன்கீழ் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நீக்க முடியவில்லை என்பது ஒட்டுமொத்த பல்கலைக்கழக நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. இது மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக உள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

குஜராத் போல் தமிழகத்திலும் நடவடிக்கை

மேலும் குஜராத்,ஆந்திரா,கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மாநில அரசு ஒப்புதலோடு பல்கலைக்கழக துணைவேந்தவர்கள் நியமிக்கப்படுகிறார்.மேலும் பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் தமிழக அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிப்பது தொடர்பாக சட்டத்தில் திருத்தம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தராக மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக கூறினார். 
 பூஜ்ஜிய ஆணைய பரிந்துரையை அதிமுகவே ஏற்கனவே செயல்படுத்தலாம் என கூறியிருந்தது எனவே இதில் அதிமுகவிற்கு மாற்றுக்கருத்து இருக்காது என்று கருதுவதாக முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் பாஜகவினரும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் இதே நிலை இருப்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்...

முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய பாஜக எம்.எல்.ஏ...! கை தட்டி வரவேற்ற திமுக

 

click me!