
தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேச தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி சென்றுள்ளார். நாளை அவருக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், நதிநீர்களை இணைக்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறி தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் உறுதி அளித்திருந்தார்.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஒ.பி.எஸ் பிரதமர் மோடியை சந்தித்து விவசாயிகள் பிரச்சனைகளை எடுத்து கூறினார்.
மேலும் விவசாயிகள் சார்பில் அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் மோடியிடம் வழங்கினார்.
தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அவருக்கு நாளை பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கபட்டது.
பின்னர், எடப்பாடி இன்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். விமானம் மூலம் சென்ற எடப்பாடி நாளை காலை பிரதமர் மோடியை சந்தித்து தமிழக வளர்ச்சி திட்டங்கள், மற்றும் விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.