
ஜனாதிபதி தேர்தலுக்கு பின் தமிழகத்தில் ஆட்சி கவிழ்ந்தால் வரவேற்போம் என ஒ.பி.எஸ் அணியின் ஆதரவாளர் செங்குட்டுவன் எம்.பி. தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெ மறைவிற்கு பிறகு தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வந்தது. அப்போது சசிகலா பொதுச்செயலாளராகவும் பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும் தேர்வு செய்யபட்டு பொறுப்பேற்றனர்.
பின்னர், சசிகலாவின் அளவற்ற பதவி ஆசை பக்கத்து இலை பாயாசத்தை தேடுவது போல ஒ.பி.எஸ்சின் பதவியையும் பறித்தார். இதனால் ஆத்திரமடைந்த பன்னீர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அதிமுகவை இரண்டாக உடைத்தார்.
இதையடுத்து உடனே சசிகலாவின் சொத்துகுவிப்பு வழக்கு அவரை சிறைக்கு அழைப்பு விடுத்தது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல், கதிகலங்கி போய் நின்றார் சசிகலா.
இதனிடையே சசிகலா பக்கம் இருந்த எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் ஒ.பி.எஸ் பக்கம் நகர தொடங்கினர். இதை புரிந்து கொண்ட சசிகலா ஆட்சியை தக்கவைப்பதற்காக எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் அடைக்கலம் வைத்தார்.
ஒ.பி.எஸ் பக்கம் எம்.எல்.ஏக்கள் செல்லாமல் இருக்க பல வாக்குறுதிகளையும் கொடுத்துள்ளார் சசிகலா.
அவர் சிறைக்கு சென்ற பின் அவரால் நியமிக்கப்பட்ட எடப்பாடி தலைமையிலான அரசு ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கூறி தற்போது தோப்பு வேங்கடாச்சலம் தலைமையில் புதிய அணி ஒன்று உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஒ.பி.எஸ் அணியின் எம்.பி செங்குட்டுவன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், எடப்பாடி அணியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பன்னீர்செல்வம் அணியின் பக்கம் வருவதற்கு வாய்ப்பு உண்டு என தெரிவித்தார்.
ஜெயலலிதா இருந்தவரை பொற்கால ஆட்சி நடைபெற்று வந்ததாகவும், தற்போது கூவத்தூர் ஆட்சி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி கவிழ்ந்தால் வரவேற்போம் என தெரிவித்தார்.