எடப்பாடி அரசின் கடைசி முழுநேர பட்ஜெட்..! பலத்த எதிர்பார்ப்புடன் இன்று தாக்கல்..!

By Manikandan S R SFirst Published Feb 14, 2020, 8:51 AM IST
Highlights

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த ஆட்சியில் அதிமுக அரசு தாக்கல் செய்ய போகும் கடைசி முழுநேர பட்ஜெட் இதுவாகும். அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

2020ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி ஆளுநர் பன்வரிலால் ப்ரோஹித் உரையுடன் தொடங்கியது.  பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துடன் 9ம் தேதி கூட்டம் நிறைவு பெற்றது. இந்தநிலையில் 2020-2021 ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த ஆட்சியில் அதிமுக அரசு தாக்கல் செய்ய போகும் கடைசி முழுநேர பட்ஜெட் இதுவாகும். அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். பட்ஜெட் தாக்கல் முடிந்தவுடன் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதில் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது தீர்மானிக்கப்படும். தொடர்ந்து வரும் நாட்களில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற இருக்கிறது.

இதனிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்து சட்டசபை செயலாளர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டத்தை 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு பேரவை தலைவர் கூட்டியுள்ளார். 2020-2021-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வருகிற அன்று காலை 10 மணிக்கு பேரவைக்கு அளிக்கப்பெறும்' என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று கூடும் கூட்டத்தொடரில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

click me!