’காஷ்மீரில் இடம் வாங்கி குடியேறப்போகும் திமுக நிர்வாகிகள்...’ தமிழிசை அதிர்ச்சி..!

By vinoth kumarFirst Published Aug 6, 2019, 3:46 PM IST
Highlights

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்ப்பது மூலம் ஸ்டாலின் தனிமை படுத்தப்பட்டுள்ளார். மேலும் இரண்டாவது வரலாற்று பிழையை ஸ்டாலின் செய்துள்ளார்.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த மு.க.ஸ்டாலின் மற்றும் வைகோ ஆகியோருக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியுள்ளதை கொண்டாடும் விதமாக பாட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியினை பாஜகவினர் வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேற்று ஒரு மகிழ்ச்சியான நாள் எனவும், இதனை எதிர்த்த பல கட்சிகள் கூட இன்று அதனை ஏற்றுள்ளது என்றும் கூறினார். 

அதுமட்டுமின்றி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து என்ற பெயரே தவிர அங்கு எந்த வளர்ச்சியும் கிடையாது என்று கூறிய அவர், சமூக நீதி என்று பேசும் எதிர்க்கட்சிகள் அதனை எதிர்த்து வருகிறார்கள். ஆனால் கலவர பூமியாக இருந்த காஷ்மீர் சுற்றுலா தளமாக தன்னுடைய பழைய பெருமையை பெற்றுள்ளது. ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்ப்பது மூலம் ஸ்டாலின் தனிமை படுத்தப்பட்டுள்ளார். மேலும் இரண்டாவது வரலாற்று பிழையை ஸ்டாலின் செய்துள்ளார். 

முன்னதாக ராகுல்காந்தியை பிரதமர் என்று கூறி முதல் பிழையை ஸ்டாலின் செய்தார். அதேபோல் சட்ட திட்டத்துக்கு உட்படாமல் கள்ள தோணியில் பயணம் செய்த வைகோவிடம் வேறு எதனையும் நாம் எதிர்பார்க்க முடியாது. வைகோ இலங்கை படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் கட்சியை குற்றம்சாட்டிவிட்டு தற்போது அவர்களுடன் கூட்டணியில் உள்ளார். 

இது ஓட்டுக்கு ஆனது அல்ல; நாட்டுக்கான அவசியம் என்ற தமிழிசை, இதுகுறித்து காங்கிரஸ் நிலைபாட்டிற்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தார். பெயரில் மட்டும் சிறப்பு என்ற பெயரே தவிர, அந்த மக்களுக்கு எந்த சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவில்லை என்றார். காஷ்மீரில் உள்ள நிலங்களை வாங்க திமுகவினர் அங்கு சென்றுவிடுவார்களோ என்ற பயம் எனக்கு உள்ளது என தமிழிசை கூறியுள்ளார். 

click me!