
பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் கடந்த 7 ஆம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். ஆனால் தேர்வில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையானோர், நீட் தேர்வு மிகக் கடினமானதாக இருந்ததாக வேதனை தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே கலைக்கல்லூரிகளில் சேருவதற்காக இதுவரை இல்லாத அளவு ஏராளமான மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீட் தேர்வு முடிவு குறித்த மாணவர்களின் அச்சமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக இடம் பிடிப்பர் என்று பா.ஜ.க. தமிழ்மாநிலச் செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "நீட் தேர்வு குறித்து தவறான தகவல்களை திமுக எம்.பி. கனிமொழி பரப்பி வருகிறார். நீட் தேர்வில் தமிழகத்திற்கு அதிக இடங்கள் கிடைக்கும்.பா.ஜ.க. வை விமர்சனம் செய்யும் அளவுக்கு எந்தப் புகாரும் இல்லை.
தமிழக மாணவர்கள் தேசிய தேர்வுகளை எதிர்கொள்ள செங்கோட்டையன் போதிய முயற்சிகளை எடுத்து வருகிறார்." இவ்வாறு தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்தார்.