
தூத்துக்குடியில் நடந்திருக்கும் அசம்பாவித்தத்தில், போலீசாரால் கொல்லப்பட்டிருக்கும் பொது மக்களின் எண்ணிக்கை, இப்போது 13 ஆக உயர்ந்திருக்கிறது.
புற்று நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முயன்ற மக்களுக்கு, அரசாங்கம் செய்திருக்கும் இந்த அநியாயத்திற்கு, மக்கள் தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பொது மக்கள் மீது முன்னறிவிப்பின்றி துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? அதுவும் இத்தனை உயிர் பலிக்கு என்ன பதில் சொல்லப்போகிறது அரசாங்கம்? ஜனநாயக நாட்டில் மக்களுக்கு தங்கள் உரிமையை பெற போராடக் கூட உரிமை இல்லையா? என அரசாங்கத்தை கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர் அரசியல்வாதிகளும், மக்களும். இந்த நிலையில் கூட அரசாங்கம் மழுப்பலான பதில்களுடன் மெளனம் காத்து வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் ஏன் தூத்துக்குடி மக்களை நேரில் சென்று பார்க்கவில்லை? என கேள்வி எழுப்பியிருக்கிறார் பாமக தலைவர் ராமதாஸ்.
மேலும் அவர் தனது டிவிட்டர் பதிவில் “தூத்துக்குடி என்ன ஏற்காடா?, ஊட்டியா?, கொடைக்கானலா?... குடும்பத்துடன் சென்று மலர்க் கண்காட்சியை திறந்து வைத்து மகிழ்ச்சியில் திளைத்து திரும்புவதற்கு? என கேட்டு எடப்பாடியை கேலியாக விமர்சனம் செய்திருக்கிறார்.