தமிழ்நாட்டுக்கு தனி கொடி வேணும்... முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேல்முருகன் வைத்த அதிரடி கோரிக்கை!

By Asianet TamilFirst Published Oct 25, 2021, 9:04 AM IST
Highlights

தமிழ் நாட்டுக்கென தனிக் கொடி தேவை என்ற கருணாநிதியின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில், அவர்களுக்கென தனிக் கொடியை வைத்திருக்கிறார்கள். தமிழகத்திலும் அதுபோன்று தனிக் கொடி தேவை என்று அவ்வப்போது அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்துவது வாடிக்கை. சில தினங்களுக்கு முன்பு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தமிழகத்துக்கு தனிக்கொடி தேவை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனும் இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பா் 1-ஆம் தேதியை கா்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் அவா்களுக்கான தனிக்கொடியை ஏற்றி கொண்டாடி வருகின்றன. ஆனால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை போன்று, தமிழ்நாட்டிற்கு என தனிக்கொடி உருவாக்கப்படவில்லை. 1970-களில் தமிழ்நாட்டுக்கென தனிக்கொடி வேண்டும் என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் கோரிக்கை விடுத்தவர் கருணாநிதி. ஆனால், அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலை காரணமாக மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற முடியவில்லை.
இந்தநிலையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 61 ஆண்டுகளை கடக்கும் நிலையில், தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி என்ற கருணாநிதியின் கனவை நிறைவேற்ற தமிழ்நாடு. இதற்கு தமிழக அரசு முன் வரவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி கேட்டுக்கொள்கிறது.” என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

click me!