அணுசக்தி அமைச்சருக்கு தமிழக எம்.பி வைத்த கோரிக்கை.. பரிசீலிப்பதாக பாபா அணு மின் நிலையம் பதில் கடிதம்.

By Ezhilarasan BabuFirst Published Mar 2, 2021, 12:11 PM IST
Highlights

ஆனாலும், விண்ணப்பங்களைத் தொகுக்கும் பணி நிறைவடைந்தவுடன், விண்ணப்ப எண்ணிக்கையைக் கணக்கிற் கொண்டு,  சென்னையில் ஓர் மையத்தை அமைக்க வாய்ப்புள்ளதா என்று பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கான பணி நியமனங்களுக்கு மும்பையில் மட்டும் எழுத்துத் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பது தமிழகத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு பெரும் சிரமங்களை உண்டாக்குமென்பதால் சென்னையில் இன்னொரு மையத்தை அறிவிக்குமாறு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் (சி.பி.எம்) அணுசக்தி இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு எழுதியிருந்த கடிதத்திற்கு கோரிக்கையை பரிசீலிப்பதாக பாபா அணு மின் நிலையம்  பதில் அளித்துள்ளது. 

பாபா அணு மின் நிலையம் சார்பில் பதில் அளித்துள்ள அதன் கண்ட்ரோலர் கே.ஜெயக்குமார் தனது கடிதத்தில், உதவித் தொகையுடனான பயில்நர் ( பிரிவு 1 & 2) க்கான தேர்வுகள் மூன்று கட்டங்களாக - துவக்க நிலைத் தேர்வு, முன்னேற்ற கட்ட தேர்வு, திறனறித் தேர்வு-  நடைபெற வேண்டியுள்ளதால் விண்ணப்ப நிலையில் இருந்து தேர்வுப் பட்டியல் வெளியிடும் வரையிலான பணி மும்பையைத் தலைமையகமாகக் கொண்டே நடத்தப்படுவதாகவும், விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் ஏராளமாக வரப்பெறுவதாலும் எழுத்துத் தேர்வை ஒன்றிற்கு மேற்பட்ட மையத்தில் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. 

ஆனாலும், விண்ணப்பங்களைத் தொகுக்கும் பணி நிறைவடைந்தவுடன், விண்ணப்ப எண்ணிக்கையைக் கணக்கிற் கொண்டு,  சென்னையில் ஓர் மையத்தை அமைக்க வாய்ப்புள்ளதா என்று பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார். கோவிட்-19 சூழலில் தொலை தூரங்களில் மையங்கள் அமைக்கப்படுவது தேர்வர்களுக்கு பெரும் இன்னல்களை ஏற்படுத்தும். போட்டியும் சம களத்தைக் கொண்டதாக இருக்காது. ஆகவே பாபா அணு மின் நிலையம் நல்ல முடிவை எடுக்கட்டும். எனவும்,  தமிழ்நாடு, புதுச்சேரி தேர்வர்களுக்கு நல்ல தேர்வுச் சூழல் அமையட்டும் என்றும் எம்.பி சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
 

click me!