கனமழை எதிரொலி… தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நவ.20க்கு ஒத்திவைப்பு!! | Tamilnadu cabinet meeting

By Narendran SFirst Published Nov 18, 2021, 11:22 AM IST
Highlights

#Tamilnadu cabinet meeting முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டதோடு நவம்பர் 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டதோடு நவம்பர் 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துள்ளது. இதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்தனர். இதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் ராட்சத மோட்டர்கள் மூலம் தண்ணீரை அகற்றவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் மழை நீர் கொட்டித்தீர்த்தது. இதனால் 68,652 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை அடுத்து டெல்டா மாவட்டங்களுக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மழையால் ஏற்பட்ட பயிர்சேதங்களை பார்வையிட்டார். மேலும் மழையால் வீடுகளையும் கால்நடைகளையும் இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வீடுகட்டுவதற்கான அரசாணையையும் வழங்கினார்.

மேலும் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழுவையும் மு.க.ஸ்டாலின் அமைத்திருந்தார். அந்த குழு டெல்டா மாவட்டங்களை ஆய்வு செய்து அதுகுறித்த விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆய்வுக் குழுவினர் அறிக்கையாகத் தாக்கல் செய்தனர். இதற்கிடையே கடந்த 1 ஆம் தமிழகம் மற்றும் புதுவையில் இயல்பான மழை அளவு 29 செ.மீ என்கிற நிலையில் இதுவரை 45 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இயல்பைவிட 54 சதவீதம் அதிகமாக மழைப் பதிவாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் இயல்பான மழை அளவு 49 செ.மீ என்கிற நிலையில் 81 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது 65 சதவீதம் இயல்பை விட அதிகம் என்று கூறப்படுகிறது. இன்னும் பருவமழை காலம் முடிவடையாத நிலையில் பல மாவட்டங்களிலும் ஆண்டு சராசரி மழை பதிவாகிவிட்டது.

இந்நிலையில், இதுவரை தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள சேதம் குறித்தும், நிவாரண நிதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கும் வகையில் வரும் நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை நடைபெறவிருந்த தமிழக அமைச்சரவை கூட்டம் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நவம்பர் 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் 4வது முறையாக நடைபெறும் இக்கூட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பு, நிவாரண நிதி அறிவிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ள பாதிப்பு நடவடிக்கையின்போது அமைச்சர்களின் செயல்பாடுகள், அறிவித்த திட்டங்களை செயல்படுத்துதல், புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

click me!