Jai Bhim: ஒடுக்கப்பட்ட மக்களின் அழுகுரல் தான் ஜெய் பீம் படம்.. இதில் சாதி சாயத்தை பூசாதீங்க.. மகேந்திரன்..!

By vinoth kumarFirst Published Nov 18, 2021, 11:04 AM IST
Highlights

தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கும், அந்தப் படத்திலே நடித்த சூர்யாவுக்கும், படத்தை அருமையாக இயக்கிய ஞானவேலுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களுக்கு கடந்த 50, 60 ஆண்டுகாலமாக கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு எல்லாம் போராட்டம் நடத்தியதோ அந்தப் போராட்டத்துக்கு ஒரு கவுரவம் கொடுக்கும் வகையில் ஜெய் பீம் படம் தயாரிக்கப்பட்டுள்ளது என மகேந்திரன் கூறியுள்ளார்.

சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டை பெற்றாலும் பாமக மற்றும் வன்னியர்கள் தரப்பில் இந்த திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சூர்யாவுக்கு மிரட்டல் வருவதை அடுத்து அவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மிகவும் சர்ச்சையாக பேசப்படும் ஜெய் பீம்' படத்தை உண்மையிலேயே பார்த்தேன். என்னுடைய வாழ்க்கையை முற்றிலுமாக பிரதிபலிக்கும் படமாக உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, சாதாரண மக்களுக்கு, மறுக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 50, 60 ஆண்டுகாலமாக கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு எல்லாம் போராட்டம் நடத்தியதோ அந்தப் போராட்டத்துக்கு ஒரு கவுரவம் கொடுக்கும் வகையில் ஜெய் பீம் திரைப்படம் அமைந்துள்ளது. 

தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கும், அந்தப் படத்திலே நடித்த சூர்யாவுக்கும், படத்தை அருமையாக இயக்கிய ஞானவேலுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'ஜெய் பீம்' ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்தும் படமா என்றால் கட்டாயம் இல்லை. அது ஒடுக்கப்பட்ட மக்கள், பாதிக்கப்பட்ட மக்கள், இருளர் இன மக்கள், சந்தேக கேஸ் என்ற பெயரில் இன்று வரை பாதிக்கப்பட்டு வரும் மக்களைப் பற்றி எடுக்கப்பட்டுள்ளது. 'ஜெய் பீம்' படத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவைத் தருகிறது.

இன்றைய நெருக்கடி மிகுந்த சூழலில் சூர்யாவோடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துணையாக நின்று, இதை ஒரு தத்துவார்த்த அரசியல் போராட்டமாக நடத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும், விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு என்பது குறைவான தொகையாகும். கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் வெள்ள நிவாரணங்கள் எல்லாம் முடிந்தபிறகு, ஊழல் பற்றித் தனியாக விசாரணை அமைப்பேன் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய அரசாங்கம் இதுவரை இந்திய வரலாற்றிலேயே யாரும் செய்யத் துணியாத ஒரு செயலைச் செய்துள்ளது. உலகத்திலேயே தனித்துவமான நீதித்துறையை இந்தியா கொண்டிருக்கிறது. அதனுடைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மாற்றப்பட்டிருப்பதும், அந்த நீதித்துறையைச் சிதைப்பதற்கு மறைமுகமாக எடுக்கக்கூடிய மத்திய அரசின் நடவடிக்கைகளையும் இந்தியக் கம்யூனிஸ்ட் வன்மையாகக் கண்டிக்கிறது என தெரிவித்துள்ளார்.

click me!