ஒண்ணுக்கும் உதவாத பட்ஜெட்... அதிமுகவை அதிர வைத்த விஜயகாந்த்...!

By vinoth kumarFirst Published Feb 14, 2020, 5:16 PM IST
Highlights

வேலைவாய்ப்புக்கான மிக முக்கிய அறிவிப்பு இல்லாதது, இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மேலும் வேலைவாய்ப்பை உருவாக்க மாவட்டம் தோறும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான அறிவிப்புகளும் இல்லை, இதன் மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாதது சிறிது ஏமாற்றத்தை தருகிறது.

தமிழக பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை மக்களுக்கு நேரடியாகச் செல்ல, சொல் வடிவில் இல்லாமல், செயல் வடிவமாக நிரூபிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- "2020-2021-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்றைக்கு பல திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. முக்கியமாக நெடுஞ்சாலைத்துறைக்கு ரூபாய் 15 ஆயிரத்து 850 கோடி, சாலை மேம்பாட்டுக்கு ரூபாய் 5 ஆயிரத்து 500 கோடி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 667 கோடி, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு ரூபாய் 500 கோடி, கிராம ஊரக வளர்ச்சிக்கு ரூபாய் 23 ஆயிரத்து 161 கோடி, விவசாயத்திற்காக ரூபாய் 11 ஆயிரத்து 894 கோடி, காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ரூபாய் 700 கோடி, சுற்றுவட்ட சாலைக்கு ரூபாய் 12 ஆயிரம் கோடி, மின்சாரத்துறைக்கு ரூபாய் 20 ஆயிரத்து 115 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மகளிர் மேம்பாட்டுக்கு ரூபாய் 78 ஆயிரத்து 796 கோடியில், குறிப்பாக டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு திட்டத்திற்கு ரூபாய் 959 கோடி ஒதுக்கியிருப்பது சிறப்பானதாகும். முதியோருக்காக 37 மாவட்டங்களில் முதியோர் ஆதரவு மையங்கள் அமைக்க ரூபாய் 476 கோடியும், காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை இணைப்புத் திட்டங்களும் மற்றும் முத்திரைத்தாள் ஒரு சதவிகிதத்தில் இருந்து 0.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு திட்டங்களுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாக இருக்கிறது. இதில் மகளிருக்காக இந்த அரசாங்கம் மிக முக்கியப் பங்கு அளித்துள்ளது. இது நாம் அனைவரும் வரவேற்கக்கூடியதாகும்.

மின்சாரத் துறையில் ரூபாய் 20 ஆயிரத்து 115 கோடி ஒதுக்கீடு செய்து மின் வெட்டு இல்லாத மின்சார இணைப்பு, 24 மணிநேரமும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடிய அளவு இத்துறையை மேம்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் ரியல் எஸ்டேட் மிக மோசமான நிலையை அடைந்து பல ஆயிரம் கோடி முதலீட்டை நம்பி வாழ்ந்த பல பேருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல், பல பிரச்சினைகளைச் சந்தித்திருந்த நிலையில், இன்றைக்கு முத்திரைத்தாள் ஒரு சதவிகிதத்தில் இருந்து 0.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது பல பேருக்கு வேலைவாய்ப்பு அமைவதற்கு இது உறுதுணையாக இருக்கிறது.

இதுபோன்ற பல்வேறு திட்டங்களை நாம் வரவேற்றாலும், பட்ஜெட் என்பது நம் கனவாக மட்டும் அமையாமல், செயல் வடிவத்திலும் மக்களுக்கு நேரடியாக செல்லக்கூடிய திட்டங்களாக இருக்க வேண்டும். மேலும் மீன்வளத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை போன்ற துறைகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வேலைவாய்ப்புக்கான மிக முக்கிய அறிவிப்பு இல்லாதது, இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மேலும் வேலைவாய்ப்பை உருவாக்க மாவட்டம் தோறும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான அறிவிப்புகளும் இல்லை, இதன் மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாதது சிறிது ஏமாற்றத்தை தருகிறது.

எனவே 2020-2021 தமிழக பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை மக்களுக்கு நேரடியாகச் செல்ல, சொல் வடிவில் இல்லாமல், செயல் வடிவமாக நிரூபிக்க வேண்டும். இந்த பட்ஜெட்தான், இந்த அரசின் இறுதி பட்ஜெடாகும். எனவே இதன் மூலம் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எல்லா வளங்களும், எல்லா நலன்களும் பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு இத்திட்டங்கள் நேரடியாகச் சென்றடைய வேண்டும் என விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

click me!