டாஸ்மாக் கடைகளை திறப்பது சொந்த காசில் சூனியம் வைக்கும் செயல்..!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை..!

By Ezhilarasan BabuFirst Published May 16, 2020, 12:25 PM IST
Highlights

ரேஷன் கடைகள் முன்பு உணவு பொருட்களை வாங்க நின்ற கூட்டத்தை விட மிக நீண்ட தூரத்திற்கு டாஸ்மாக் கடைகள் முன்பு திரண்ட கூட்டத்தை நாம் காண முடிந்தது. இதனால் தனிமனித விலகல் காற்றில் பறக்கவிடப்படும் இது காசு கொடுத்து சூனியம் வைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும் 

டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது ,  இது குறித்து கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ,  தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும் ஆன்லைன் மூலமாக மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருந்த உத்தரவுக்கு  உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது இது மிகுந்த ஏமாற்றத்தையும் வேதனையையும் அளிப்பதாக உள்ளது .  மேலும் தமிழகத்தின் சமூக நிலைமையையும் பெண்களின் உணர்வையும் கணக்கில் எடுத்து வழங்கப்பட்டதாக இத்தீர்ப்பு அமையவில்லை .  இந்தியாவில் கொரொனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது .  மதுபான கடைகள் திறப்பு மற்றும் வியாபாரமும் நோய்த்தொற்றை நிச்சயமாக அதிகப்படுத்தும் .  ரேஷன் கடைகள் முன்பு உணவு பொருட்களை வாங்க நின்ற கூட்டத்தை விட மிக நீண்ட தூரத்திற்கு டாஸ்மாக் கடைகள் முன்பு திரண்ட கூட்டத்தை நாம் காண முடிந்தது. 

 

இதனால் தனிமனித விலகல் காற்றில் பறக்கவிடப்படும் இது காசு கொடுத்து சூனியம் வைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும் ,  மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் மாநில உரிமைகள் பாதிக்கப்படுவதற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கும் மத்திய அரசோடு போராடுவதற்கும் முன்வராத தமிழக அரசு ஏழை குடும்பங்களை சீரழித்து அரசு வருவாயை பெருக்கும் இந்த பிரச்சனைக்கு மட்டும் மின்னல் வேகத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது,  இது ஒரு புறமிருக்க மாநில உரிமைகள் குறித்து கவலைப்படாமல் மோடி அரசுக்கு  துதிபாடும் போக்கையும் ஏழைக் குடும்பங்களை பற்றி கிஞ்சிற்றும் அக்கறை இன்றி சொற்ப நிவாரண  தொகையையும் வழங்கிவிட்டு தற்போது அதை மதுபான விற்பனை மூலம் அபகரித்துக்கொள்ளும் அநீதியையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது .  இந்த நடவடிக்கையானது குடும்ப வன்முறை பாலியல் வன்முறை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பல்வேறு வகையான குற்றங்களை அதிகரிக்கும் . 

ஏழைக் குடும்பங்களை மேலும் பட்டினியில் ஆழ்த்தும் ,  ஏற்கனவே இந்திய பொருளாதார கண்காணிப்பு  மையம் இந்திய மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பட்டினியால் தள்ளப்படும் போக்கைச் சுட்டிக் காட்டியிருக்கிறது .  இந்த ஆபத்து மேலும் அதிகரிக்கும் ஆழமாகும் மதுபான கடைகளில்  மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் கட்டாயம் ஏற்படுவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறையின் கவனம் குறைவதற்கான வாய்ப்பு ஏற்படும் .  தேவையற்ற வேலை பளுவை அவர்கள் மீது சுமத்தும் .  டாஸ்மாக் கடைகளில் கூடுதல் நெரிசலில் மக்கள் அங்கேயே நின்று குடிப்பதை தடுப்பது சாத்தியமே அல்ல .  டீக்கடைகளில் கூட பார்சல் மட்டும் தான் என்று எச்சரிக்கையாக அறிவிக்கும் அரசு , இதில் தாராளமாக இருப்பது பொருத்தமற்ற செயலாகும் .  தமிழக அரசு செய்த மேல்முறையீட்டில் கிடைத்த உத்தரவாக இது இருந்தாலும் தமிழகத்தின் நிலைமையையும் கோடிக்கணக்கான பெண்களின் உணர்வையும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் கணக்கில் கொண்டு டாஸ்மார்க் கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என அதில் கூறப்பட்டுள்ளது . 

 

click me!