தொழிற்சாலைகள் மூலம் ஏற்படும் சுற்று சூழல் பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுங்கள்.. முதல்வருக்கு ஒபிஎஸ் கோரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Oct 15, 2021, 3:12 PM IST
Highlights

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்னும் பழமொழிக்கேற்ப மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தால்தான் தொழில்கள் வளர்ந்து பொருளாதாரம் மேம்படும், எனவே தொழில்கள் வளர வேண்டுமானால், பொருளாதாரம் மேம்பட வேண்டுமானால், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் மற்றும் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்களின் ஆரோக்கியம் மேம்பட வேண்டும்

நாட்டின் பொருளாதாரம் மேம்பட ஏதுவாக தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டும், தொழில் அமைதி நிலவ வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ஓர் அரசு தொழிற்சாலைகளின் மூலம் ஏற்படும் மாசுகள் உயிர்வாழ இன்றியமையாததாக விளங்குகின்ற காற்றிலும், நீரிலும், கலக்காதவாறு சுற்றுச்சூழலை பேணுவதிலும், மாசுவை கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தினால்தான் அது நிலைத்த வளர்ச்சிக்கு உகந்ததாக அமையும். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் கழிவுநீர் காற்றிலும், நீரிலும் கலந்து மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் நீர்(  மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு )  சட்டம் மற்றும் காற்று (  மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு)  சட்டம் ஆகியவை இயற்றப்பட்டு அவற்றின் கீழ் விதிகள் வகுக்கப்பட்டு. விதுகளை நடைமுறைப்படுத்தும் பணியினை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வருகிறது. 

இருப்பினும் மேற்படி சட்டங்களும் அதன் கீழ் ஒதுக்கப்பட்ட விதிகளும் தொடர்ந்து தொழிற்சாலைகளால் புறக்கணிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் கும்மிடிப்பூண்டி, சிப்காட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகவும், சுற்றுச்சூழல் விதிகளை மீறி பல தொழிற்சாலைகள் செயல் படுவதன் காரணமாக அப்பகுதிகளில் உள்ள காற்று, நீர் மற்றும் நிலம் மாசுபடுதல் உற்பத்தியின் போது வெளியேறும் புகை பலகட்ட செயல்முறைகளுக்கு பிறகு உயரமான புகைபோக்கி மூலம் வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தாலும், இதனை எந்த தொழிற்சாலையும் கடைபிடிக்கவில்லை என்றும் மாறாக கூரை வழியாக கரும்புகை வெளியேற்றப்பட்டு நச்சுப் புகையால் காற்று அசுத்தமாகிறது என்றும், இதன் காரணமாக காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த காற்றை சுவாசிக்கும் போது உடல் ரீதியான பிரச்சினைகள் மக்களுக்கு ஏற்படுவதாகவும், செய்திகள் வருகின்றன. 

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்னும் பழமொழிக்கேற்ப மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தால்தான் தொழில்கள் வளர்ந்து பொருளாதாரம் மேம்படும், எனவே தொழில்கள் வளர வேண்டுமானால், பொருளாதாரம் மேம்பட வேண்டுமானால், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் மற்றும் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்களின் ஆரோக்கியம் மேம்பட வேண்டும், இதனை உறுதி செய்யும் பொருட்டு கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திலேயே மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகம் இயங்கி வருகிறது என்றாலும், அவற்றின் தரம் குறைந்துகொண்டே வருவது அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுமக்கள் சுவாசிக்கும் காற்றின் தரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வண்ணம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொய்வின்றி தனது பணிகளை மேற்கொள்வது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காற்று மண்டலத்தை தாக்காமலிருக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தொழிற்சாலைகள் கண்டிப்பாக கடைப் பிடிக்கின்றனவா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். அதேபோல் விதியை மீறும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே தமிழக முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் விதிகளை சரியாக பின்பற்றுகின்றனவா என்பதை கண்காணிக்கவும் அப்பகுதி மக்கள் ஆரோக்கியமாக வாழ்வது உறுதி செய்யவும் விதிகளை மீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!