காய்ச்சல், சளி அறிகுறியா? அலட்சியமாக இருக்காதீங்க.. தஞ்சை சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர் எச்சரிக்கை.!

By vinoth kumarFirst Published Jun 17, 2022, 12:17 PM IST
Highlights

கொரோனா தொற்றில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, தடுப்பூசி மட்டும்தான் ஒரே தீர்வு. அதேபோல் தற்காப்பு நடவடிக்கைகளாக இருக்கும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உடலில் சிறிய அளவு பாதிப்பு ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது அவசியம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில், தடுப்பூசி சிறப்பு முகாம் உட்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள  காச நோய் மருத்துவமனையில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- கொரோனா தொற்றில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, தடுப்பூசி மட்டும்தான் ஒரே தீர்வு. அதேபோல் தற்காப்பு நடவடிக்கைகளாக இருக்கும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனாவல் உயிர் இழப்பு தமிழகத்தில் 3 மாதமாக ஏற்படவில்லை. நேற்று முன்தினம் தஞ்சாவூரில் 18 வயதுடைய பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அவருக்கு ஏற்கெனவே கடந்த இரண்டு மூன்று நாட்களாக கூடுதலாக காய்ச்சல் இருந்தும் வீட்டிலேயே இருந்துள்ளார். எனவே, பொதுமக்களுக்கு அரசின் வேண்டுகோள், காய்ச்சல், சளிக்கான அறிகுறி, அல்லது தொண்டை தொடர்பான பிரச்சினைகள் இதுபோன்ற புதிதாக உடலில் மாற்றம் ஏற்படும்போது உடனடியாக மருத்துவமனைக்கு வந்து ஆலோசனை பெற வேண்டும்.

சில நாட்களில் சரியாகிவிடும் என்று வீட்டிலேயே இருந்து தப்புக்கணக்கு போட வேண்டாம். தஞ்சையில் அப்படிதான் அந்த பெண், வீட்டிலேயே இருந்து, பின்னர் தனியார் மருத்துவமனை சென்று இறுதியாக அரசு மருத்துவமனை வந்து உயிரிழந்துள்ளார். உடலில் சிறிய அளவு பாதிப்பு ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது அவசியம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். 

click me!