கனி இனிக்கிறது, தமிமுன் அன்சாரி சூசகம்..!! சட்டத்துறை அமைச்சர் சிரிப்பு..!! சட்டப்பேரவையில் கலகலப்பு.

By Ezhilarasan BabuFirst Published Sep 16, 2020, 11:33 AM IST
Highlights

இன்று சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ அவர்கள், நாகப்பட்டினத்தில் சட்டக் கல்லூரி துவக்க அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

நாகையில் அரசு சட்டக் கல்லூரி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார். இன்று சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ அவர்கள், நாகப்பட்டினத்தில் சட்டக் கல்லூரி துவக்க அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். 

நாகப்பட்டினம் என்பது காவிரி டெல்டா மாவட்டங்களில் முக்கிய நகரமாகும். ஐம்பெரும் தமிழ் காப்பியங்களில் இடம்பெற்ற ஊராகும். ஆங்கிலேயர்கள் காலத்திலும் முக்கிய நகரமாக இருந்தது. சோழ மன்னர்கள் இங்கிருந்துதான் தென்கிழக்காசியாவை வெற்றி கொள்ள புறப்பட்டார்கள். எனவே , டெல்டா மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் ஒரு சட்டக்கல்லூரி அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார். 

இதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் திரு. சி.வி சண்முகம் அவர்கள், இது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றார். மேலும் தனியார் யாரேனும் அங்கு சட்ட கல்லூரி அமைக்க முன் வந்தால் கூறுங்கள், அதற்கு அனுமதி அளிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றார். அப்போது எழுந்த மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், பரிசீலிக்கப்படும் என்றதற்கு நன்றி என்றவர், நீங்கள் கூறிய இரண்டு கனிகளும் இனிக்கிறது. ஆயினும் முதலில் கூறிய கனி அதிகம் இனிப்பதால், அதையே தருவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றதும் அமைச்சர் அதை புன்னகையோடு எதிர் கொண்டார். 

அதாவது  தனியார் நிறுவனம் அங்கு சட்டக் கல்லூரி தொடங்க முன் வந்தாலும், அரசு சார்பில் சட்டக்கல்லூரி தொடங்கினால்தான் குறைவான கட்டணத்தில் எளியவர்களும் படிக்க முடியும் என்பதால், அதை முதல் கனி என குறிப்பிட்டு, அது அதிகம் இனிக்கிறது என்பதால் அதையே தருவது குறித்து பரிசீலிக்குமாறு அவர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
 

click me!