
கஜானாவை நோக்கி அல்ல; மக்களின் முன்னேற்றம் நோக்கியதாக இருக்க வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் கூறியதற்கு, கஜானாவை நோக்கி சென்றாலும் கமலுக்கு ஏமாற்றமே மிஞ்சும் என்று பாஜகவின் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது ஆளுங்கட்சியான எடப்பாடி ஆட்சியை விமர்சித்து வந்தார். இதற்கு அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
ஆனால், நடிகர் கமல் அதற்கு பதிலுக்கு பதிலடி கொடுத்து வந்தார். இவை அனைத்தையும் தமது டுவிட்டர் மூலமே கூறி வந்தார். முதலில் கமல் களத்தில் இறங்கட்டும். அப்புறம் பேசட்டும் என்று அமைச்சர்கள் கடும் விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில், அரசியலுக்கு வருவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கமல் கூறியிருந்தார். ராமேஸ்வரத்தில் இருந்து பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் தனது அரசியல் பயணத்தை தொடங்க போவதாக தெரிவித்துள்ளார். மேலும் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
நடிகர் கமல், நேற்று முன்தினம் முதல் ரசிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இரண்டாவது நாளான நேற்று சிவகாசி, ராசிபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ரசிகர்கள் மத்தியில் நடிகர் கமலஹாசன் பேசினார். இதுபோல் நாம் கூடுவது முதல் முறை அல்ல. இன்று நம் இலக்கு சற்றே மாறியிருக்கிறது. கடந்த 37 ஆண்டுகளாக என்னுடன் வரும் சகோதரர்கள் பலர் இங்கே வந்துள்ளனர். என்ன கிடைக்கும்
என்று இதுவரையும் நீங்கள் கேட்டதில்லை. அதேபோல, இனியும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இலக்கு நோக்கி பயணிக்க தயாராக இருக்க வேண்டும் என்றார்.
மேலும், நம் இலக்கு கஜானாவை நோக்கி அல்ல; மக்களின் முன்னேற்றம் நோக்கியதாக இருக்க வேண்டும். அதனால்தான் நமக்கு வெற்றி நிச்சயம் என்று உறுதியாக நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.
கமலின் இந்த பேச்சு குறித்து, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நடிப்பின் மூலம் கஜானாவை நிரப்பிய கமல், தற்போது கஜானா குறிக்கோள் அல்ல என பேசுவதை யாரும் நம்பமாட்டார்கள் என்று கூறியிருந்தார்.
இதேபோல் பாஜகவின் எஸ்.வி.சேகர், தனது டுவிட்டர் பக்கத்தில், நடிகர் கமல் ஹாசன் கஜானாவை நோக்கி சென்றாலும் ஏமாற்றமே மிஞ்சும். அது சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டு விட்டது என்று பதிவிட்டுள்ளார்.