அன்வர் ராஜாவை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சி.வி சண்முகம் தாக்க பாய்ந்ததாக தகவல் வருகிறது. சி.வி சண்முகத்திற்கு சுகர் அதிகம், அவருக்கு பிளட் பிரஷர் (ரத்த அழுத்தம்) அதிகம். அதனால் அவர் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவராக இருக்கிறார். அதனால்தான் அவர் இப்படி நடந்து கொள்கிறார்
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு சர்க்கரை மற்றும் பிளட் பிரஷர் (ரத்த அழுத்தம்) அதிகம் என்றும், அதனால்தான் அவர் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை அடிக்க பாய்ந்திருக்கிறார் என்றும், அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். இதற்கு காரணம் ஓபிஎஸ் இபிஎஸ் என்ற திறனற்ற தலைமை தான் என்றும் அவர் தாக்கியுள்ளார்.
கண்ணுக்கெட்டிய தூரம் எதிரிகளையே காணோம்.. எங்கோ ஓடி மறைந்தனர் எதிரிகள்... தனக்குப் பின்னாலும் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என அதிமுகவையும் அதன் எதிர்காலத்தையும் பேசிவிட்டு மறைந்தவர் ஜெயலலிதா. அவரின் மறைவுக்குப் பின்னரும் அந்த இயக்கம் அதே கட்டுக்கோப்புடனும் வீரியத்துடனும் இருக்கும் என்று எதிர்பார்த்த அவரது தொண்டர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அவரின் மறைவுக்குப் பின்னர் பல்வேறு களேபரங்களுக்கு இடையில் ஓபிஎஸ் இபிஎஸ் என்ற இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது அதிமுக. ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை என கட்சியை இரண்டாக பங்குபோட்டு தங்களின் அதிகாரத்த ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு தக்கவைத்துக் கொண்டது. ஆனால் அந்த அளவுக்கு கட்சி வலுவாகவும், வீரியமாகவும் இருக்கிறதா என்றால் சந்தேகமே?
தட்டுத்தடுமாறி முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்தது. சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது, இது அதிமுக தொண்டர்களுக்கு பெருத்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனக்கு பின்னறும் 100 ஆண்டுகள் இந்த இயக்கம் நிலைத்து நிற்கும் என்று கூறிவிட்டு மறைந்தாரே எங்கள் ஒப்பற்ற தலைவி என சொல்லிச்சொல்லி குறைபட்டுக் கொள்கிறார்கள். இந்நிலையில் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் எப்படியாவது கௌரவமான ஒரு வெற்றியை பெறவேண்டும் என திட்டமிட்டுள்ள அதிமுக அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பது தொடர்பாக விவாதிக்க நேற்று முன்தினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியது.
அதற்கான கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மறைந்த முன்னாள் முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படத்தை பயன்படுத்தாததுதான் தோல்விக்கு காரணம் என்றும், கட்சியை காப்பாற்ற வேண்டுமென்றால் சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா பேசியுள்ளார். அதுமட்டுமின்றி சமீபத்தில் அவர் எடப்பாடி பழனிச்சாமியை ஒருமையில் பேசியது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதானல் எற்கனவே அவரின் மீது வெறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அன்பு ராஜாவை பேச அனுமதிக்கக்கூடாது என குரலெழுப்பி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சி.வி சண்முகம் அன்வர் ராஜாவை தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த கூட்டத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அன்வர் ராஜாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தையும் சி.வி சண்முகம் தரப்பினர் தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் கசிந்து தற்போது ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் சி. வி சண்முகத்தின் இந்த நடவடிக்கையை பலரும் பல வகைகளில் விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கே. சி பழனிச்சாமி அதிமுகவையும் அதன் தலைமையையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் அவர், அன்வர் ராஜாவை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சி.வி சண்முகம் தாக்க பாய்ந்ததாக தகவல் வருகிறது. சி.வி சண்முகத்திற்கு சுகர் அதிகம், அவருக்கு பிளட் பிரஷர் (ரத்த அழுத்தம்) அதிகம். அதனால் அவர் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவராக இருக்கிறார். அதனால்தான் அவர் இப்படி நடந்து கொள்கிறார் என்றும், மிகவும் கட்டுக்கோப்பாக இருந்த கட்சியில் இந்த அளவுக்கு சலசலப்பு ஏற்படுவதற்கு காரணம் ஓபிஎஸ் இபிஎஸ் என்ற திறமையற்ற தலைமைதான் காரணம் என்றும், அவர்களின் சுயலாபத்திற்காக கட்சியை இந்த நிலைமைக்கு ஆளாகி வைத்திருக்கின்றனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.