ஆண்மையிருந்தால் அதிமுக தயவில்லாமல் ஜெயித்துக் காட்டுங்கள்... நயினார் கருத்துக்கு அதிமுக நெத்தியடி பதில்!!

By Narendran SFirst Published Jan 26, 2022, 5:15 PM IST
Highlights

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால்தான் சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது என அதிமுக கழக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம் தெரிவித்துள்ளார். 

அரியலூர் மாணவி மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தமிழக பாஜக சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் அதிமுக, எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பாஜக, எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. சட்டசபையில் ஆண்மையோடு பேச அதிமுக-வில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை என கூறினார். நயினார் நாகேந்திரனின் இந்த கருத்தால் அதிமுக – பாஜக கூட்டணி இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால்தான் சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது என அதிமுக கழக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பாஜக கட்சிக்கு தொண்டர்களே இல்லை. குறிப்பாக தென்காசி, கன்னியாகுமாரி, கோயம்புத்தூர் ஆகிய பகுதியில் மட்டும் சில தொண்டர்கள் உள்ளனர். ஆனால் நெல்லை சட்டமன்ற தேர்தலில் அதிமுக தொண்டர்கள் உழைத்ததால்தான் நயினார் நாகேந்திரன் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆனால் இப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்மை உள்ளதா என கேள்வி எழுப்பி உள்ளார். சட்டமன்றத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் வாய் திறக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதுபோன்ற நயினார் நாகேந்திரன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை மிகவும் தரக்குறைவாக பேசி வருகிறார். எங்கள் தயவால் எங்கள் ஆதரவால் தாமரை சின்னத்தை நாங்கள் தூக்கி நிறுத்தி வெற்றி பெற வைத்தோம். ஆனால் எங்களைப் பற்றிய நயினார் நாகேந்திரன் இப்படி பேசி வருகிறார்.

2001 ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட நயினார் நாகேந்திரன், அப்போது தொழில்துறை, மின்சாரத்துறை, ஊரக தொழில்துறை உள்ளிட்ட அமைச்சராகவும் இருந்துள்ளார். ஆனால் இப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்மை இருக்கிறதா என கேட்கக் கூடிய கேள்விக்கு நாங்கள் ஒரே பதிலை சொல்கிறோம். நயினார் நாகேந்திரன் வேண்டுமானால் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் இதே தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். அப்போது நாங்கள் அவருக்கு ஆண்மை இருக்கிறது என சொல்வோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைத்ததால் தான் இவ்வளவு பெரிய படுதோல்வி அடைந்து உள்ளோம். இதற்கு காரணமே பாஜக கட்சி தான். சட்டமன்றத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவுக்கு ஆதரவாக பேசி வருவது அவர்களது சுயநலம் ஆகும். அவர்கள் சிறைக்கு செல்லாமல் இருப்பதற்காக இது போன்று பேசி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். 

click me!