திடீரென முதல்வர் ஸ்டாலின் மீது பாசம்.. சசிகலாவின் தீவிர ஆதரவாளர் திமுகவில் இணைகிறாரா?

By vinoth kumarFirst Published Jan 17, 2022, 12:33 PM IST
Highlights

சசிகலா தீவிர ஆதரவாளராக அறியப்படுவர் புகழேந்தி. சமீபத்தில் பாமகவை விமர்சித்தது தொடர்பாக அதிமுகவில் இருந்து புகழேந்தி அதிரடியாக நீக்கப்பட்டதையடுத்து சசிகலாவின் ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி மீது புகழேந்தி புகார் தெரிவித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. 

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி புகார் அளித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாத பொருளாக உருவாகியுள்ளது. 

அரசு வேலை வாங்கி வருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தரலமறைவாக இருந்து வந்த அவரை ஒரு வழியாக தமிழக போலீஸ் பெங்களூருவில் வைத்து கைது செய்தனர். பின்னர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு உச்சநீதிமன்றம் கடந்த வாரம் நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கோவை தொண்டாமுத்தூரில் கடந்த 2021 ஜனவரி 3-ம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக தொண்டர்களிடையே பேசிய ராஜேந்திர பாலாஜி, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவர்கள் குடும்பம் குறித்து தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசினார். 

மேலும், இது எஸ்.பி.வேலுமணியின் கோட்டை. எனவே, எங்கள் அனுமதி இல்லாமல் தொண்டாமுத்தூர் எல்லையை நீங்கள் தாண்ட முடியாது. தைரியம் இருந்தால் இப்போது நீங்கள் தொண்டாமுத்தூர் வரவேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கும் வகையில் ராஜேந்திர பாலாஜி பேசினார். தொண்டாமுத்தூர் வரும்போது மு.க.ஸ்டாலின் மீது தாக்குதல் தொடுக்க தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் அவரது பேச்சு இருந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ராசா குறித்தும் தவறான வார்த்தைகளில் பேசியதுடன், இந்து, முஸ்லிம்மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சொற்களையும் அவர் பயன்படுத்தினார் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி;- மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரை முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தரக்குறைவாக பேசியுள்ளார். கடந்த ஆட்சியில் காவல்துறை அவர்கள் பக்கம் இருந்ததால் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளேன் என்றார். 

இந்நிலையில், புகழேந்தி போலீசில் அளித்துள்ள புகார் மனுவும், அதை தொடர்ந்து அவர் அளித்துள்ள பேட்டியும் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சசிகலா தீவிர ஆதரவாளராக அறியப்படுவர் புகழேந்தி. சமீபத்தில் பாமகவை விமர்சித்தது தொடர்பாக அதிமுகவில் இருந்து புகழேந்தி அதிரடியாக நீக்கப்பட்டதையடுத்து சசிகலாவின் ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி மீது புகழேந்தி புகார் தெரிவித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. திடீரென புகழேந்தி திமுக ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் விரைவில் அக்கட்சியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

click me!