அதிரடி சரவெடி ஸ்டாலின்….. குற்றச்சாட்டுக்கு ஆளான நிர்வாகிகள் தூக்கி அடிப்பு….அச்சத்தில் திமுகவினர்……..தேர்தலுக்கு தயாராகிறதா திமுக?

First Published Jun 11, 2018, 9:37 AM IST
Highlights
staline change the admin in Kongu mandalam


கொங்கு மண்டலத்தில், இரண்டு மாவட்ட செயலர்கள் உட்பட, 10 மாவட்டங்களின், நகர, ஒன்றிய நிர்வாகிகளை, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அதிரடியாக  மாற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து மேலும், சில மாவட்ட செயலர்களின் பதவி பறிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளதால், நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தி.மு.க.,வை பலப்படுத்த திட்டமிட்ட, ஸ்டாலின், தமிழகம் முழுவதும் உள்ள, ஊராட்சி முதல், மாவட்ட செயலர்கள் வரையிலான கட்சி நிர்வாகிகளை, சென்னை அறிவாலயத்திற்கு நேரில் வரவழைத்து, அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ரகசிய புகார் பெட்டிகள் வைக்கப்பட்டன. அதில், மாவட்ட செயலர்கள் முதல், கீழ்மட்ட நிர்வாகிகள் மீது சரமாரியாக புகார்கள் குவிந்தன.

இந்த புகார்கள் மீது, திமுக வழக்கறிஞர்கள் குழு விசாரணை நடத்தி, ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், முதற்கட்டமாக, கொங்கு மண்டலத்தில், இரண்டு மாவட்ட செயலர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். கோவை தெற்கு மாவட்ட செயலர் தமிழ்மணியின் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக, தென்றல் செல்வராஜ் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலர் இளங்கோவன் நீக்கப்பட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் காந்தி செல்வன் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர பொறுப்பாளர் பதவியிலிருந்து, 'மேங்கோ' பழனிசாமி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நாகராஜனும், கோவை மாநகர் வடக்கு மாவட்டம் பி.என்.புதுார் பகுதி செயலர் மணி நீக்கப்பட்டு, சண்முகசுந்தரமும், பெரிய கடை வீதி பகுதி செயலர் செல்வராஜ் நீக்கப்பட்டு, மனோகரனும், காந்திபுரம் பகுதி செயலர், உதயகுமார் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக, சேதுராமனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல, கோவை மாநகர் தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு, திருப்பூர் வடக்கு, நீலகிரி, ஈரோடு வடக்கு, சேலம் மேற்கு, சேலம் கிழக்கு மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்டங்களிலும், ஏராளமான நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொங்கு மண்டலத்தை தொடர்ந்து தென் மண்டலம், மத்திய மண்டலம், வட மண்டலங்களிலும் நிர்வாகிகள் மாற்றம் தொடர உள்ளதால், நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து தேர்தலுக்கு திமுக தயாராகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!