ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் சுஷ்மா சுவராஜ் என அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சையின்போதே மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இதையடுத்து சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சுஷ்மா சுவராஜ் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும்,பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி தலைவருமான திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையளிப்பதாக கூறியுள்ளார்.
ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் சுஷ்மா சுவராஜ் என பதிவிட்டுள்ளார்.
அவர் தீடீர் மறைவினால் துயரத்தில் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பாரதிய ஜனதா கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.