
நரிக்குறவர் இல்லத்தில் காலை டிபன் சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர் குழந்தைக்கு இட்லி ஊட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. " உங்கள் வீட்டுக்கு வந்தால் சோறு போடுவீர்களா" என முதலமைச்சர் கேட்டதற்கு கறிசோறு போடுவோம் என அவர்கள் கூறிய நிலையில் நரிக்குறவர் வீட்டில் இன்று முதல்வர் ஸ்டாலின் உணவருந்தினார். அப்போதுதான் இந்த நிகழ்ச்சி சம்பவம் நடந்தது.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறார். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடியின, நரிக்குறவர் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கலைவதற்கு முனைப்பு காட்டி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாமல்லபுரம் அருகே உள்ள புஞ்சேரியில் நரிக்குறவர் குடியிருப்புக்கு சென்ற அவர், அம் மக்களுக்கு பட்டா வழங்கி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் கல்வி தொடர்பாகவும் சமூகத்தில் அவர்கள் படும் இன்னல் குறித்தும் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தனர்.
அது சமூகவலைதளத்தில் வைரலான நிலையில், அந்த வீடியோ முதல்வரின் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து மாணவிகளை தலைமைச் செயலகம் வரவழைத்து அவர்களுடம் முதல்வர் பேசினார். அதன் பின்னர் மார்ச் 17ஆம் தேதி பால்வளத்துறை அமைச்சர் மு. நாசரின் கைப்பேசி மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் அம்மாணவிகளின் குடும்பத்தினர் உள்ளிட்ட நரிக்குறவர் மக்களுடன் பேசினார். அப்போது அவர்களிட் குறைகளை கேட்டறிந்தார். சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தங்களுக்கு தேவைப்படுகிறது என்றும் முதல்வர் ஐயா நேரில் வந்து பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது அவர்களிடம் உங்கள் வீட்டுக்கு வந்தால் சோறு போடுவீர்களா என முதல்வர் கேட்க, அப்போது அவர்கள் கறிசோறு போடுவோம் என்று கூறினர்.
எனவே நிச்சயம் வருகிறேன் என முதல்வர் அவர்களுக்கு அப்போது உறுதியளித்திருந்தார். அதனடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனி குடியிருப்புக்கு சென்றார். ஆளுநர் கொடுத்த தேனீர் விருந்தை கூட புறக்கணித்துவிட்ட முதல்வர் நரிக்குறவர் சமூக மக்களை நேரில் சந்திக்க இன்று வந்தது கண்டு அம்மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர். முதல்வரை வரவேற்க நரிக்குறவ இன மக்கள் தயாராக இருந்த நிலையில் அம்மக்களின் குடியிருப்புக்கு சென்று அங்கு மரக்கன்று ஒன்றை நட்டார். அவர்களுக்கு குடும்ப அட்டைகள், முதியோர் உதவித் திட்டம் போன்றவற்றை வழங்கினார். அதைத்தொடர்ந்து ஆவடி நரிக்குறவர் காலனியில் உள்ள நரிக்குறவ மாணவி திவ்யாவியின் வீட்டிக்கு சென்றார். அங்கு மக்கள் வழங்கிய உணவை சாப்பிட்டார்.
நரிக்குறவர் காலனியில் உள்ள ஒருவர் காலை உணவை தயார் செய்தீருந்தார். முதல்வருக்கு இட்லி வடை வழங்கினர். முதல்வர் அதை அன்போடு பெற்று சாப்பிட்டார். அப்போது அருகிலிருந்த சிறுமிக்கும் அவர் இட்லி ஊட்டினார். மாணவி திவ்யாவின் வீட்டில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக நரிக்குறவ மாணவிகள் அவருக்கு பாசி மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அது அனைத்தையும் மகிழ்ச்சியுடன் அவர் ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். நரிக்குறவர் வீட்டில் அமர்ந்து முதலமைச்சர் உணவு அருந்தியது நரிக்குறவர் சிறுமிக்கு இட்லி ஊட்டியது உள்ளிட்ட வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. முதலமைச்சரின் இந்த செயலை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.