விலங்குகள் நலவாரியத்தை கலைக்க வேண்டும் , பீட்டாவுக்கு தடை வேண்டும் - கொதித்தெழுந்தார் ஸ்டாலின்

Asianet News Tamil  
Published : Jan 16, 2017, 03:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
விலங்குகள் நலவாரியத்தை கலைக்க வேண்டும் , பீட்டாவுக்கு தடை வேண்டும் - கொதித்தெழுந்தார் ஸ்டாலின்

சுருக்கம்

மத்திய அரசு தனது கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியத்தின் தற்போதைய அமைப்பைக் கலைத்துவிட்டு, தமிழகத்திற்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் புதியமுறையில் உருவாக்க வேண்டும் , நமது கலாச்சாரத்திற்கு எதிராகவும், தேசவிரோத சக்தியாகவும் செயல்படும் வெளிநாட்டு என்.ஜி.ஒ., நிறுவனமான பீட்டா அமைப்புக்கு மத்திய அரசு உடனடியாகத் தடைவிதிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். 

மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை:

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குப் பெயர் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை இன்று  தனித்தீவாக்கி கொடூரமான முறையில் தடியடி நடத்தப்பட்டுள்ளதற்கு தி.மு.கழகத்தின் சார்பில் வன்மையானக் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.

உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காகத் தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். தமிழர் கலாச்சாரப் பெருமைமிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளை இன்றைய காலத்திற்கேற்ப உத்வேகத்துடனும், உரிய பாதுகாப்புடனும் நடத்த வேண்டும் என்பதில் தி.மு.கழகம் உறுதியாக இருக்கிறது.

தமிழகத்தின் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கத் தவறியதால் ஏற்பட்டிருக்கும் பாதகமான விளைவுகளை மத்திய - மாநில அரசுகள் இப்போதாவது எண்ணிப் பார்க்க வேண்டும். 

குறிப்பாக, மத்திய அரசு தனது கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியத்தின் தற்போதைய அமைப்பைக் கலைத்துவிட்டு, புதியமுறையில் அதனை அமைத்து, அதில் தமிழகத்திற்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் உருவாக்க வேண்டும். 

அப்போது தான், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் ’விலங்குகளை வதை செய்பவையல்ல’ என்பதும் அவை மனிதருக்கும், விலங்குகளுக்கும் காலங்காலமாக உள்ள வாழ்வியல் அடிப்படையிலான உறவை வெளிப்படுத்துபவை என்பதை உணர முடியும். 

நாட்டு மாடுகளை வளர்க்கவும், பெருக்கவும் வாழ்வியல் முறையிலான அமைப்பு முறையே ஜல்லிக்கட்டு என்பதை உணர்த்தக் கூடியவர்கள் இந்த வாரியத்தில் இடம் பெற வேண்டும். இதன் அடிப்படையில், உரிய பாதுகாப்புகளுடன் ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு அடையாளத்தைக் காட்டும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற முடியும்.

இதற்கு ஏற்ற வகையில் மத்திய அரசு உடனடியாக  செயல்படுவதுடன், தொண்டு நிறுவனம் என்ற பெயரில், நமது கலாச்சாரத்திற்கு எதிராகவும் தேசவிரோத சக்தியாகவும் செயல்படும் வெளிநாட்டு என்.ஜி.ஒ நிறுவனமான பீட்டா அமைப்புக்கு மத்திய அரசு உடனடியாகத் தடைவிதிக்க   வேண்டியது அவசியமாகும். 

இந்தியா எனும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் பண்பாட்டுக்கூறுகளையும், அவற்றின் தொன்மை அடிப்படைக் கருத்தியலையும் உணராத வெளிநாட்டு அமைப்புகள் வேறு உள்நோக்கங்களுடன் இந்த மண்ணில் செயல்பட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, கடைசியில் அதனைத் தகர்க்கும் போக்கினை மத்திய – மாநில அரசுகள் இனியும் கடைப்பிடிக்காமல், உச்சநீதிமன்றத்தின் சட்டப்பூர்வமான அனுமதியுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பதற்கு இனியேனும் அக்கறையோடு ஆக்கப்பூர்வமாக செயல்படவேண்டும் .

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?