"தடையை மீறி சென்று ஏரியை பார்வையிடுவேன்" - ஸ்டாலின் அதிரடி!!

First Published Jul 27, 2017, 11:44 AM IST
Highlights
stalin stopped from enter edappadi


நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இன்று சேலம் வருகை தர உள்ளார். அதேபோல் சேலத்தில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். 

சென்னையில் இருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையத்தை வந்தடைந்தார். அப்போது அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில், கட்சராயன் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சேலம் எஸ்.பி. ராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய எஸ்.பி. ராஜன், மு.க.ஸ்டாலின் வருகையால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால், அவருக்கு அனுமதி மறுத்துள்ளதாக தெரிவித்தார். 

கோவையில் இருந்து சேலம் செல்வதற்காக மு.க.ஸ்டாலின், காரில் சென்று கொண்டிருந்தபோது கோவை, சுங்கச்சாவடி அருகே அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், சேலத்தில் இன்று மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை நீட் தேர்வில் விலக்கு கோரி மனித சங்கிலி போராட்டம் நடத்த சிறப்பான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மனிதசங்கிலி போராட்டத்தில் தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் பெருமக்கள், மாணவ - மாணவிகள் மற்றும் பெற்றோர் அத்தனை பேரும் கலந்து கொண்டு மிகப்பெரிய போராட்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அந்த போராட்டத்தைக் கொச்சைப்படுத்த வேண்டும், அந்த போராட்டம் வெற்றி பெறக் கூடாது என்ற ஓரவஞ்சனையோடு எடப்பாடி தலைமையிலான ஆட்சி செயல்பட்டு வருகிறது.

மனித சங்கிலி போராட்டத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்த திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமி முயன்று வருகிறது. கட்சராயன் ஏரியில் ஏற்கனவே 2 மாத காலமாக தூர்வாருதல் நடைபெற்று வருகிறது. இந்த பணி பொதுமக்களின் ஒத்துழைப்போடு செய்து முடித்திருக்கிறார்கள்.

இந்த பணியை நான் பார்வையிட வேண்டும் என்பதற்காக, மாவட்ட செயலாளர் வேண்டுகோளின்படி நான் வந்துள்ளேன். கோவையில் இருந்து சேலம் சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில், கனியூர் சுங்கச்சாவடியில் காவல் துறையினர், போகக்கூடாது என தடை விதித்துள்ளனர்.

அது தொடர்பாக எனக்கு நோட்டீஸ் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில், சேலத்தில் இன்று மாலையில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்துக்கு தடை போட்டுள்ளார்கள். போராட்டத்துக்குத்தான் தடை போட்டுள்ளார்களே தவிர, இந்த சாலையில் செல்லக் கூடாது என்று நோட்டீசில் போடவில்லை. தடையையையும் மீறி சென்று பார்வையிடுவேன். கட்சராயன் ஏரியில் மண் அள்ளியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

click me!