சிக்னல் கொடுத்தால் 15 அதிமுக எம்.எல்.ஏ.க்களை ஸ்டாலின் வீட்டு வாசலில் நிறுத்துவேன்... செந்தில் பாலாஜி அதகளப்பேச்சு..!

By Thiraviaraj RMFirst Published Nov 22, 2019, 11:27 AM IST
Highlights

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிக்னல் காட்டினால் அடுத்த நாளே 15 எம்.எல்.ஏ.க்களை அவரின் வீட்டு வாசல் முன்பு கொண்டு போய் நிறுத்துவேன் என  செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கரூரில் பேசிய அவர், ’’ எடப்பாடி ஆட்சி ஊழல் ஆட்சியாக இருக்கிறது. எல்லாவற்றிலும் கொள்ளை அடிக்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை. துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமே கூறினார். இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிக்னல் காண்பித்தால் அடுத்த நாளே பத்து என்ன 15 எம்.எல்.ஏ.க்களை அவரின் வீட்டு வாசல் முன்பு கொண்டு போய் நிறுத்த முடியும். ஒன்றிரண்டு அமைச்சர்களே வர தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதை அவர் விரும்பவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டும் என விரும்புகிறார். நம்மால் என்ன செய்ய முடியுமோ? அதை தான் வாக்காளர்களிடம் சொல்ல வேண்டும் என அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் என்னிடம் தெரிவித்தார். அ.தி.மு.க. போன்று பொய்யான வாக்குறுதிகளை அளிக்க கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

உள்ளாட்சி தேர்தலுக்காக வரியை குறைத்துள்ளார்கள். முதியோர் உதவித்தொகை ஆணையும் ஏராளமாக வழங்கப்படுகிறது. ஆனால் மாதாமாதம் பணம் வராது. பா.ஜ.க.வின் அடிமை ஆட்சி தான் இங்கு நடக்கிறது. ஆட்சி முடிந்ததும் சேலம், திருச்சி, வேலூர் அல்லது புழல் சிறையில் ஊழல் பேர்வழிகள் மொத்தமாக அடைக்கப்படுவார்கள்.

இன்றைக்கு தமிழகத்தை பாதிக்கும் நீட், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். வருகிற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உறுதி. அதே போல் 2021 சட்டசபை தேர்தலிலும் 234 தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராவார். அதற்கு பிறகு 100 ஆண்டுகள் ஆனாலும் சென்னை கோட்டை பக்கமே அ.தி.மு.க வர முடியாது’’ என அவர் தெரிவித்தார்.

click me!