கோடநாடு விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலாலை நேரில் சந்தித்து முறையிட உள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதை மறைக்கவே அவரது கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர் என்று கூலிப்படைத் தலைவன் ஷயான் டெல்லியில் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்தார். டெகல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் இதற்கு பின்னணியில் இருந்து இதை வெளியிட்டார்.
மேலும், இவர்கள் கோடநாடு கொள்ளை, கொலை தொடர்பான ஆவணப் படத்தையும் வெளியிட்டு, பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோடநாடு பங்களாவில் கொள்ளை மற்றும் அதன் தொடர்ச்சியாக நடந்த மரணங்களின் பின்னணி என்ன? கோடநாடு விவகாரத்தில் சிறப்பு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்..
கோடநாடு விவகாரத்தில் எந்த பதிலையும் தராத முதலமைச்சர் வழக்கு மட்டுமே நடப்பதாக கூறுகிறார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீதி விசாரணை நடத்தப்படும் என முதல்வரால் கூற முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவ்ர் கோடநாடு விவகாரம் தொடர்பாக இன்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து முறையிட உள்ளோம். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடமும் முறையிட உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு கோடநாடு விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் ஆளுநரை சந்திக்க உள்ளார்.