
நாட்டின் நலன் கருதி தேசிய அரசியலில் பாஜகவுடன் இணைந்து செயல்படுவோம். சொந்த கட்சியினருக்கு வாய்ப்பு வழங்குவதற்காகவே உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தனித்து போட்டியிடுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி;- நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகள் 490 பேரூராட்சிகள் 138 நகராட்சிகள் என மொத்தம் 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது அதிக இடங்களில் அதிமுக வெற்றி பெற்று முக்கிய பதவிகளை கைப்பற்றுவோம்.
ஒவ்வொரு கட்சியும் அவரவர் கட்சியினருக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என விருப்பப்படும் வழக்கம்தான். எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தேர்தலில் குறைந்த அளவிற்கே வாய்ப்பு வழங்க முடியும். உள்ளாட்சி தேர்தலில் நிறைய பேருக்கு வாய்ப்பு வழங்கக் கூடிய சூழலில் கட்சியினர் அதிக அளவில் போட்டியிட வேண்டும் என ஒவ்வொரு கட்சியினரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுமே இந்த சிரமம் உள்ளது. இந்த சூழ்நிலையில்தான் பாஜகவுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உடன்பாடு ஏற்படவில்லை. எதிர்காலத்தில் தேர்தல் வரும்போது அப்போதைய நிலைப்பாடு தெரிவிக்கப்படும். அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறுவது என்று கூறுவது தவறு. அந்த கட்சியினருக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்துள்ளனர். தேசிய அரசியலைப் பொருத்தவரை நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் இணைந்து செயல்படுவோம். அப்போதுதான் தமிழகம் வளர்ச்சி பெறும் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று கூறினார்.
எங்கள் குழந்தை எங்களுக்கு முக்கியம். அவரவர் குழந்தை அவரவர்க்கு முக்கியம். கட்சி தலைமை நிர்வாகிகளுக்கு கட்சியினரை குழந்தை போன்றவர்கள் அவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திமுகவின் 8 மாத ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்களே அதிகம். கொரோனோ பரவலை தடுக்க திமுக அரசு போதுமான அளவு நடவடிக்கை எடுக்கவில்லை. திமுகவின் 8 மாத கால ஆட்சியில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களே தினசரி நிகழ்கிறது. தற்போது கொரோனா பாதிப்பு குறைத்து காண்பிக்கப்படுகிறது. கொத்துக்கொத்தாக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதிமுக எம்.எல்.ஏக்கள் குறித்து அவதூறு பேசிய நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துவிட்டார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் வருத்தம் தெரிவித்துவிட்டார்; தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.