
கையாலாகாத அரசு, போதைப் பொருள் புகலிடம், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற அவலநிலை என திமுக அரசை மிகக்கடுமையாகச் சாடி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆற்றிய உரை, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை ஆளும் திமுக அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தைச் சீரழித்துவிட்டதாகக் கூறி, அதிமுக தலைமையிலான கூட்டணி சார்பில் தமிழகம் தழுவிய போராட்டங்கள் நடைபெற்றன. கடலூரில் நடைபெற்ற பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புள்ளிவிவரங்களுடன் திமுக அரசின் தோல்விகளைப் பட்டியலிட்டு ஆக்ரோஷமாகப் பேசினார்.
பெண்களுக்குப் பாதுகாப்பற்ற 'இருண்ட' ஆட்சி
அன்புமணியின் பேச்சில் முதன்மையாக ஒலித்தது பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைதான். "தமிழகத்தை எத்தனையோ மன்னர்களும், வெள்ளையர்களும் ஆண்டிருக்கிறார்கள். ஆனால், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத ஒரே ஆட்சி இந்த திமுக ஆட்சிதான்" என்று அவர் சாடினார். கடந்த 5 ஆண்டுகளில் 7,832 கொலைகள் நடந்துள்ளதாகவும், அதில் 1,973 பெண்கள் மற்றும் 361 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கிருஷ்ணகிரி முதல் விளாத்திக்குளம் வரை நடந்த பாலியல் கொடூரங்களைச் சுட்டிக்காட்டிய அவர், 38 குழந்தைகள் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் வெட்கக்கேடு என்றார். "ஒரு முதலமைச்சரால் தன் மாநிலப் பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால், அவர் எதற்கு அந்தப் பதவியில் இருக்க வேண்டும்?" என்ற காரசாரமான கேள்வியை அவர் முன்வைத்தார்.
போதைப்பொருட்களின் தலைநகரமாகத் தமிழகம்?
தமிழகத்தில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயப் புழக்கம் கட்டுக்கடங்காமல் போயுள்ளதாக அன்புமணி குற்றம் சாட்டினார். அரசு தரவுப்படியே 22 லட்சம் கிலோ கஞ்சா விற்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அமெரிக்காவில் கிடைக்கும் கொடிய போதைப்பொருட்கள் இன்று தமிழகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் வாசலில் கிடைப்பதாக வேதனை தெரிவித்தார். 500 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு 1,500 கிளப்புகளைத் திறந்துள்ளதாகவும், 24 மணிநேரமும் பிளாக்கில் மது கிடைப்பதாகவும், அந்தப் பணம் நேரடியாக 'ஸ்டாலின் குடும்பத்திற்கே' செல்வதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
நிர்வாகத் தோல்வி மற்றும் கடன் சுமை
திமுக அரசின் நிதி மேலாண்மையை அன்புமணி கடுமையாக விமர்சித்தார். 1947 முதல் 2021 வரை தமிழகத்தின் கடன் 4.56 லட்சம் கோடியாக இருந்தது, ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திமுக கூடுதலாக 4.96 லட்சம் கோடி கடன் வாங்கி, மொத்தக் கடனை 10 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்தார். "இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியதுதான் ஸ்டாலின் செய்த சாதனை" என்று அவர் கிண்டல் செய்தார்.
13 மார்க் எடுத்தால் ஃபெயில்
திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளை மட்டுமே முழுமையாக நிறைவேற்றியுள்ளதாகக் கூறிய அன்புமணி, "திமுக அரசுக்கு நான் போடும் மார்க் 100-க்கு 13 தான். 13 மார்க் எடுத்து ஃபெயில் ஆன ஒரு கட்சிக்கு மீண்டும் ஏன் மக்கள் வாக்களிக்க வேண்டும்? இவர்களைத் தூக்கி எறியுங்கள்" என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மாற்றத்திற்கான அழைப்பு
"முதலமைச்சர் ஸ்டாலின் தினமும் விளம்பரப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார், ஆனால் நிர்வாகம் என்றால் என்னவென்றே அவருக்குத் தெரியவில்லை" என்று சாடிய அன்புமணி, இன்னும் இரண்டு மாதங்களில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஊழல், கஞ்சா மற்றும் திறமையற்ற இந்த ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும் என்பதே பாமக மற்றும் அதிமுக கூட்டணியின் ஒற்றை இலக்காக இந்தப் போராட்டத்தில் முழங்கப்பட்டது.