தமிழகமா..? போதை மாஃபியாக்களின் வேட்டைக்காடா..? திமுக அரசின் முகத்திரையைக் கிழிக்க அதிமுக அறைகூவல்..!

Published : Mar 16, 2026, 12:32 PM IST
EPS vs MK Stalin

சுருக்கம்

காவல்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் காவல் நிலையங்களுக்குள் புகுந்து ரவுடிகள் நடத்தும் அராஜகங்கள், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டதை உணர்த்துகின்றன.

தமிழகத்தில் நிலவி வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் புழக்கம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து, அதிமுக பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை, தற்போதைய திமுக அரசின் மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறது.

சட்டம்-ஒழுங்கு - போதைப் பொருள் அச்சுறுத்தல்

2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழகம் போதைப் பொருள் மாஃபியாக்களின் கூடாரமாக மாறிவிட்டதாக திரு. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதும், சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்குத் தொடர்பு இருப்பதும் மாநிலத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. காவல்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் காவல் நிலையங்களுக்குள் புகுந்து ரவுடிகள் நடத்தும் அராஜகங்கள், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டதை உணர்த்துகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 30 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான வன்கொடுமைகள்

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. கிருஷ்ணகிரி மற்றும் விளாத்திகுளம் போன்ற இடங்களில் நிகழ்ந்த கொடூரமான சம்பவங்கள் தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளன. இத்தகைய குற்றங்களில் ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதும், அவர்களுக்கு ஆதரவாக அரசு நிர்வாகம் செயல்படுவதும் மிகுந்த வேதனைக்குரியது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு மற்றும் வரிச் சுமைகள்

அம்மா உணவகம், தாலிக்குத் தங்கம், விலையில்லா மடிக்கணினி போன்ற மக்கள் நலத் திட்டங்களை முடக்கிய திமுக அரசு, மின்கட்டணம், குடிநீர் வரி மற்றும் சொத்துவரி ஆகியவற்றை பலமடங்கு உயர்த்தி மக்கள் மீது பெரும் சுமையைத் திணித்துள்ளது. அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதுடன், வீட்டு வரி மற்றும் பத்திரப் பதிவு கட்டணங்களையும் உயர்த்தி நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக் கனவை சிதைத்துள்ளதாகக் கட்டுரையில் சாடப்பட்டுள்ளது.

அறைகூவல்

நிர்வாகத் திறனற்ற 'விடியா' திமுக அரசின் இத்தகைய மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்து, 17.03.2026 அன்று தமிழகத்தின் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன. "மக்களை வதைக்கும் இந்தக் கொடூர ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று குறிப்பிட்ட ழனிசாமி, இந்த அறப்போராட்டத்தில் பொதுமக்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று தனது அறிக்கையில் அறைகூவல் விடுத்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TVK Vijay Game: முதல் வருடம் விஜய் முதலமைச்சர்.! 5 ஆண்டுக்கு 5 சி.எம்.! ஆட்சியை பிடிக்க ஆபர்களை அள்ளி வீசும் அமித்ஷா?!
அரசியல் சாணக்கியரை வளைத்துப் போட்ட விஜய்..! தைலாபுரத்தில் முடிவாகும் தவெக, பாமக கூட்டணி..?