மின்கட்டண விவகாரத்தில் மக்களை குழப்பும் ஸ்டாலின்...!! எண்ணம் ஈடேறாது என அமைச்சர் தங்கமணி காட்டம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 20, 2020, 5:40 PM IST
Highlights

கணக்கீடு செய்தது விதிகளுக்கு உட்பட்டதே என்றும், அது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நேர்மைத் தன்மையைக் காட்டுகிறது எனவும் மாண்புமிகு உயர்நீதி மன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மின்கட்டண விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி மக்களை திட்டமிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் குழப்புவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. பி. தங்கமணி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-

கொரோனா நோய் தொற்று தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக எடுத்ததன் காரணமாகத்தான் இந்தியாவிலேயே,தமிழ்நாட்டில் தான் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் சதவீதம் அதிகமாகவும், இறப்பு விகிதம் மிகக்குறைவாகவும் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, தமிழ்நாட்டு மக்களை இத்தொற்றிலிருந்து மீட்கும் பணியில் நேர்மையுடனும், துணிவுடனும், எந்தவித சமரசமும் இன்றி, மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மின்சாரம் என்பது மக்களின் அத்தியாவசிய தேவை என தற்போது கூறும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், முந்தைய திமுக ஆட்சியின் மெத்தனத்தால் நிலவிய கடுமையான மின்வெட்டின் காரணமாக, தமிழ்நாடே இருளில் மூழ்கி இருந்ததை மறந்துவிட்டு சந்தர்ப்பவாத அரசியல் மட்டுமே செய்து வருகிறார். மாண்புமிகு அம்மாவும், அவரைத் தொடர்ந்து மாண்புமிகு அம்மாவின் அரசும், கடந்த 10 ஆண்டுகளாக எடுத்துவரும் பல்வேறு சீரிய நடவடிக்கைகளால் மின் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லாத வகையில், தமிழ்நாட்டில் தரமான மின்சாரம் தங்குதடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

 

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு தொடர்ந்து மின்மிகை மாநிலமாகவும் திகழ்ந்து வருகின்றது. கொரோனா தொற்று பரவாமல் இருக்கத்தான், ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு நடைமுறை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் தான், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பணியாளர்கள் வீடுதோறும் சென்று மின் கணக்கீடு செய்யவில்லை. அதற்கு பதில், தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்கள் (LT-Service),தங்களுடைய ஜனவரி-பிப்ரவரி மாத கணக்கீட்டு பட்டியலின்படி, மார்ச்-ஏப்ரல் மாதங்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துமாறு கோரப்பட்டது. தற்போது, தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மின் கணக்கீடு செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மின் அளவீடு 4 மாதங்களுக்கு உள்ள மின் பயன்பாடு என்பதால்,  நான்கு மாத காலத்திற்கான மின் நுகர்வு, இரண்டு மாதங்களுக்கான (bi-monthly) வீதப்படி அடிப்படையில் சமமாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த மின் நுகர்வு இரண்டு மாதங்களுக்கான வீதப்பட்டிப்படி மின் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. கணக்கீடு செய்யும்பொழுது ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கான நுகர்விலும், மாண்புமிகு அம்மா அவர்கள் 2016ம் ஆண்டு முதல் கொண்டு வந்த100 யூனிட்டுகள் இலவச மின்சாரப் பயனை அனைத்து வீட்டு மின் உபயோகிப்பாளருக்கும் வழங்கிய பின்பு கணக்கீடு செய்து, மீதம் செலுத்த வேண்டிய தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட தொகையில், ஏற்கனவே மார்ச்-ஏப்ரல் 2020 மாதங்களில் முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது கழிக்கப்பட்டுள்ளது. மேலே கூறியபடி கணக்கீடு செய்ததில் ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகை அதிகமாக இருப்பின், நுகர்வோரின் எதிர்வரும் கணக்கீட்டில் அந்தத்தொகை சரி செய்யப்படும். மேற்கண்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கணக்கீட்டு முறை தவறு என தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில், மேற்குறிப்பிட்ட கணக்கீட்டு முறை சரியானது என்பதனை மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பு அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மேற்கண்ட கணக்கீட்டுமுறையினால் தான், ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கான  கணக்கீட்டிலும், தனித்தனியே 100 யூனிட் இலவச மின்சாரம் நுகர்வோருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் சென்னை உயர்நீதி மன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு கணக்கீடு செய்தது விதிகளுக்கு உட்பட்டதே என்றும், அது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நேர்மைத் தன்மையைக் காட்டுகிறது எனவும் மாண்புமிகு உயர்நீதி மன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த கணக்கீடு குறித்து பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களை தீர்க்கும் வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், ஒவ்வொரு நுகர்வோரும் தனித்தனியே அவர்களுடைய கணக்கீட்டு முறையை வெளிப்படையாகவும், தெளிவாகவும் காணும் வகையில் தனது இணயதளத்தில் வெளியிட்டுள்ளது.  கணக்கீட்டில் சந்தேகம் ஏதும் இருக்கும் பட்சத்தில், நுகர்வோர்கள் இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாண்புமிகு உயர்நீதி மன்றம் தெள்ளத்தெளிவாக தனது தீர்ப்பைக் கூறிய பிறகும், மின்சாரக் கட்டணம் குறித்த கணக்கீட்டு விவரம் இவ்வாறு மிகத் தெளிவாக இணையதளத்தில் வெளியிட்ட பின்னரும், மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் அவர்கள் திரும்பத்திரும்ப “மின்சார ரீடிங் எடுத்ததில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன என மக்கள் கூறுகின்றனர்” எனவும் “தவறான அடிப்படையில் கணக்கீடு” எனவும், “மின்சார வாரியத்திற்கு இலாபம்” எனவும் உண்மைக்கு மாறான செய்தியை கூறிக்கொண்டிருப்பது, மக்களை குழப்ப முயல்வதுதான். ஆனால், அவரது எண்ணம் ஈடேறாது. இது மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் சந்தர்ப்பவாத அரசியலின் உச்சகட்டம். என அமைச்சர் தங்கமணி அறிக்கையில் வாயிலாக கண்டித்துள்ளார். 
 

click me!