
சேலம் மாணவர் முத்துகிருஷ்ணன், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் மர்மமான முறையில் இறந்தார். இவரது மறைவுக்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அவரது பெற்றோரும், உறவினர்களும், பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், நேற்று மதியம் முத்துகிருஷ்ணன் சடலம், சொந்த ஊரான சேலம் அரிசிபாளையம் கொண்டு வரப்பட்டது. அப்போது, அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அங்கு சென்றார்.
அப்போது, அங்கிருந்த ஒரு வாலிபர், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பை வீசினார். அந்த வாலிபரை, போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது, அவர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷமிட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீச்சு சம்பவம் நேற்று நடந்தது. பொன்.ராதா மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம், தமிழர்களின் பண்புக்கு துளியும் ஏற்புடையதல்ல. இது போன்ற சம்பவம் இனி நடக்காதவாறு தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் போலீசாருக்கு உள்ளது. அவர்கள் அதனை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.