
மத்திய அரசின் 3 ஆண்டுகள் சாதனைகள் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றுமே இல்லை என்று தெரிவித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக அரசு மீது உள்ள குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே, மாட்டிறைச்சி தடைச்சட்டம் கெண்டுவரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கடந்த மூன்று ஆண்டுகளில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, எந்த ஒரு நல்ல திட்டத்தையும் கொண்டுவரவில்லை என தெரிவித்தார்.
தங்கள் மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறைக்கவே. மாட்டிறைச்சிகாக மாடுகள் விற்பனை செய்வதை தடுக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தார்.
மாடுகளை விற்க விதிக்கக்கட்டுள்ள தடையால் விவசாயிகளும், சிறுபான்மையினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மு.க.ஸ்டாலின் உடனடியாக இந்த தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பாலில் கலப்படம் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரைணை நடத்த வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.