"தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் ஸ்டாலின் பார்வையிடலாம்" - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

First Published Aug 11, 2017, 11:29 AM IST
Highlights
stalin can visit all lake in TN says HC


தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை, திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பார்வையிடுவதை தடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம், எருமைப்பட்டியில் உள்ள கட்சராயன் ஏரியை திமுகவினரும் பொதுமக்களும் இணைந்து தூர்வாரினர். அந்த ஏரிக்குள் அதிமுகவினர் கரைகளை உடைத்து சேதப்படுத்தி சட்டவிரோதமாக மண் அள்ளிச் செல்வதாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மு.க.ஸ்டாலின், கட்சராயன் ஏரியை பார்வையிட சேலம் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டு அன்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளை தூர்வார சென்ற மு.க.ஸ்டாலினை தடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு கட்சராயன் ஏரி விவகாரத்தில் ஸ்டாலினுடன் எந்த கவுரவ பிரச்சனையும் இல்லை எனவும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவே தடுத்து நிறுத்தப்பட்டார் எனவும் விளக்கம் அளித்தது.

கட்சராயன் ஏரியை பார்வையிட திமுக செயல்தலைவர் ஸ்டாலின் 25 பேருடன் செல்லலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, கட்சராயன் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கினார். சேலம் மாவட்ட நிர்வாகத்திடம் முன்கூட்டியே தெரிவித்துவிட்டு, கட்சராயன் ஏரியை பார்வையிடலாம் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஏரியை பார்வையிட செல்லும் முன் 2 நாட்களுக்கு முன்பதாகவே போலீசாரிடம் தகவல் தெரிவிக்கவும் நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகத்தல் உள்ள ஏரி, குளங்களை மு.க.ஸ்டாலின் பார்வையிடுவதை தடுக்கக் கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தது.

click me!