திமுக சார்பில் ஏரி, குளங்களை தூர் வாருவதற்கு யாரும் தடை விதிக்க கூடாது என உத்தரவிடும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் மழை பொய்த்து போனதால், தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. இதனால், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், விவசாயத்துக்காக வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல், ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டனர்.
இதற்கிடையில் ஏரி, ஆறு, குளங்களில் மண் மற்றும் மணல்களை கொள்ளையடிக்கும் சில கும்பல் தமிழகம் முழுவதும் பல கிளைகளை வைத்துள்ளது. இதற்கு சில அரசியல்வாதிகளும் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஏரி, குளங்களை தூர் வாரும் பணிகளை செய்து வருகின்றனர். இதனை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தலைமையில் கண்காணித்து பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
எதிர்க்கட்சியினர் தொடர்ந்து ஏரி குளங்களை தூர் வாரி வருவதால், மக்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை என தமிழக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம், சேலம் அருகே ஏரியை தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார். அதன்பின்னர், அப்பணி நடப்பதாக தெரியவில்லை.
இதையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள கட்சராயன் ஏரியை தூர் வாரும் பணியை பார்வையிட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்றார். அப்போது, அவரை தடுத்து நிறுத்திய போலீசார், கைது செய்தனர். இதற்கு, அனைத்து கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், திமுக சார்பில் ஏரி, குளங்களை தூர் வாரும் பணிக்கு தமிழக அரசு முட்டுக்கட்டையாக உள்ளது. அப்பணிக்கு தடை விதித்து வருகிறது. மக்களுக்காக செய்யும் பணிக்கு தடை விதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதி, மனுவை வரும் திங்கட்கிழமை வழக்காக எடுத்து கொள்ளப்படும் என கூறினார்.