சபரிமலை விவகாரத்தில் இந்துக்கள் அனைவரும் ஒன்றுபடாவிட்டால் நாம் நம் கலாசாரத்தை இழக்க நேரிடும் என்றும் கேரள வெள்ளம் மற்றும் கஜா புயல் ஆகியவற்றுக்கு தெய்வ குற்றமே காரணம் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து கடந்த மாத நடைத் திறப்புக்கு சென்ற பெண் பத்திரக்கையாளர், பெண்ணியவாதிகள் உள்ளிட்டோர் சன்னிதானத்தை அடைய ஒரு சில மீட்டர்கள் இருந்த நிலையில் அவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். காவல் துறையினரும் அவர்களுக்க தடை விதித்தனர்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களிடம் பேசினார். உச்சநிதிமன்றம் இப்படி விசித்திரமாக தீர்ப்பு சொல்லும் என்று எதிர்பார்க்கவில்லை என கூறினார்.
அய்யப்பன் கோவிலுக்குள் இளம் பெண்கள் போகலாம் என உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது எனவும் சந்தேகம் தெரிவித்தார். அதே நேரத்தில் கேரள அரசு சபரிமலை விவகாரத்தில் அவசரம் காட்டுவதாகவும் .
முல்லை பெரியாறு போன்ற பல முக்கிய வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சபரிமலை வழக்கில் மட்டும் அவசரம் ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.
சபரிமலைக்கு பெண்கள் அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும் . ஆகம விதிகளை பின்பற்ற வேண்டும். சபரிமலை பிரச்சினையில் மத்திய அரசும், கேரள அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய ஜீயர். கஜா புயல், கேரள வெள்ள பாதிப்பு என அனைத்துக்கும் கலாசாரத்தை மீறியதால் வந்த து தெய்வ குற்றமே காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.
இந்து கலாசாரத்தின் அடிப்படையில் தந்திரி என்ன சொல்கிறாரோ அதன்படி பெண்கள் நடந்து கொள்ள வேண்டும். இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பிரச்சினைகள் வராது எனவும் ஜீயர் தெரிவித்தார்..
கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து சொன்ன கருத்துக்கு பதிலடி கொடுத்ததன்மூலம் தமிழகத்தில் பிரபலமான ஜீயர் தற்போது மீண்டும் வாய் திறந்துள்ளார்.