தேர்தல் அரசியலை நாடாமல் ஈழத்தமிழர்களுக்காக போராடும் இயக்கம் தமிழர் தேசிய முன்னணி தான். இதன் தலைவரான பழ.நெடுமாறன் ஈழ மற்றும் தமிழக தமிழர் உரிமைகளை நிலைநாட்டுவதில் வெறித்தனமான கவனத்தை மிக மென்மையான குரலில் காட்டுவார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று திருநெல்வேலி மாநகர் பாளையங்கோட்டை சைவ சபையின் சார்பில் சைவ சமய மாநாடு துவங்கியுள்ளது. இதன் துவக்க விழாவில் பேசிய பழ.நெடுமாறன்...
“கர்நாடகம் உள்ளிட்ட நமது பக்கத்து மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளிலேயே கல்வி கற்க கல்வி மொழி சட்டம் உள்ளது. தமிழகத்தில் அந்த சட்டம் இல்லை. இந்த சட்டத்தை கொண்டு வர எந்த அரசும் தயாராக இல்லை.
நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 71 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் தமிழ் மொழிக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. தமிழ் மொழியானது ஆங்கிலத்திற்கு இன்னும் அடிமையாகவே உள்ளது. தமிழானது ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் இல்லை. தமிழகத்தில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கொண்டு வர வேண்டும். அதற்கு பொது மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.” என்றவர்...
“மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தால் அவர்களுக்கு அறுபது லட்சம் முதல் ஏழரை கோடி வரை அபராதம் விதிக்கும் சட்டத்தை இலங்கை பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. அந்த சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசும், மோடியும் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.” என்றும் அழுத்தமாக சொல்லி முடித்தார்.
இதில் அதிகப்படியான ஏழரை கோடி ரூபாயைதான் அடிக்கடி அபராதமாக போட்டு தீட்டி, தமிழக மீனவர்களை அலற விடும் மூவ்களில் இருக்கிறதாம் இலங்கை அரசு. அதனால்தான் மோடி இந்த சட்டத்தை தகர்க்க வேண்டும் எனும் குரல் எழுந்துள்ளது!