
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு ஸ்பீச் தெரபி அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் விரைவில் தங்குதடையின்றி பேசுவார் எனவும் அவரின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், கடந்த சில மாதங்களாக குரல் வள பாதிக்கப்பட்டு சரிவர பேச முடியாமல் இருக்கிறார். இதனால், அவர் பேச வரும் விஷயங்களையும் மறந்து தடுமாறுகிறார். அவருக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பால் கட்சியின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது தமிழக அரசியல் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், விஜயகாந்த், இழந்த செல்வாக்கை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார். புதிய நிர்வாகிகளை நியமிப்பது உள்ளிட்டவைகளை கட்டமைத்து வருவதாக தகவல்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த், டெங்குவால் பாதிக்கபட்டோரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். விவசாயிகளின் கரும்பு நிலுவைத் தொகை பிரச்சனைக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சில விவசாயிகள், விஜயகாந்தின் பேச்சு குழப்பமடைய செய்ததாக கூறினர்.
விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிடம் இது குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, விஜயகாந்த், தங்கு தடையின்றி பேசுவதற்காக ஸ்பீச் தெரபி, அளிக்க ஏற்பாடு செய்துள்ளதாக பிரேமலதா கூறியுள்ளார்.