டெண்டர் முறைகேடு வழக்கில் முதல்கட்ட விசாரணை அறிக்கையை தமிழக அரசு வழங்க உத்தரவிடக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது.
டெண்டர் முறைகேடு வழக்கின் முதல் கட்ட விசாரணை அறிக்கையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
டெண்டர் முறைகேடு வழக்கில் முதல்கட்ட விசாரணை அறிக்கையை தமிழக அரசு வழங்க உத்தரவிடக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, எஸ்.பி.வேலுமணி தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆட்சிமாற்றத்தால், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆகஸ்டு மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு புதிய விசாரணை அடிப்படையிலானது என தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.ஏ.ஜி. அறிக்கையை காரணம் காட்டுவது திசைதிருப்பும் முயற்சி என்று வாதிட்டார்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்போது, முதல்கட்ட விசாரணை அறிக்கையை வழங்க தயாராக உள்ளோம் என தெரிவித்தார். இதனையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், உயர்நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு அறிக்கையை உயர்நீதிமன்றமே வழங்க மறுப்பது முறையாகாது. எனவே டெண்டர் முறைகேடு வழக்கின் முதல் கட்ட விசாரணை அறிக்கையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது. மேலும், எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.