மூன்று முன்னாள் அமைச்சர்கள் சம்பாதிக்கவும் அவசர அவசரமாக ஊழல் செய்யவும் மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சட்டப்படி நடைபெற வேண்டிய ஸ்மார்ட் சிட்டி திட்டம் தற்போது நடைபெறுகிறது. பல ஆண்டுகளாக ஸ்மார்ட் சிட்டி கூட்டம்கூட நடத்தப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் எல்லாம் தவறாகவே ஆரம்பிக்கப்பட்டன. இத்திட்டத்தைச் செயல்படுத்த தனித் தலைவரை நியமித்திருக்க வேண்டும். எம்எல்ஏக்களை அழைத்து ஆலோசித்திருக்க வேண்டும். ஆனால், அதிமுக ஆட்சியில் அக்கட்சி எம்எல்ஏக்களைக் கூட அழைத்து ஆலோசனை கேட்கவில்லை.
மூன்று முன்னாள் அமைச்சர்கள் சம்பாதிக்கவும் அவசர அவசரமாக ஊழல் செய்யவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. எத்துறையில், எப்படிக் கூடுதலாக ஊழல் செய்யலாம் என்ற அடிப்படையில்தான் ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டமே தொடங்கப்பட்டிருக்கிறது. அதற்குச் சிறந்த உதாரணம், மதுரை மீனாட்சியம்மன் கோயில் பேவர் பிளக். ஆற்று மணலைத் திருடி கொண்டு வந்து, எங்குமே கிடைக்காதது போல கற்களைக் கொண்டு சாலை அமைத்துள்ளனர். சாலைகளை வீணாக்கியும் ஊழலுக்காகவுமே இத்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளனர். தேவைக்கும் ஜனநாயகத்துக்கும் முரணாகவே இத்திட்டம் மதுரையில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.” என்று பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.