
கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பையும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா, காங்கிரசில் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். அவர்,கடந்த 1999 முதல் 2004-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் சார்பில் கர்நாடக மாநில முதலமைச்சராக பதவி வகித்தார். 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மகாராஷ்டிரா மாநில ஆளுநராக பணியாற்றினார்.
2009-ம் ஆண்டில் மத்தியில் ஆண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் எஸ்.எம்.கிருஷ்ணா பணியாற்றியுள்ளார். மேலும், இந்திரா காந்தி மற்றூம் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையிலும் பணியாற்றியுள்ளார்.
தற்போது, காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா திடீரென கட்சியிலிருந்து விலகியுள்ளார். மேலும், தனது கட்சிப் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என புகார் கூறியுள்ள கிருஷ்ணா அதனால் தான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் சேரப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.