
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பதாமி, சாமுண்டீஸ்வரி என இரண்டு தொகுதிகளில் முதலமைச்சர் சித்த ராமையா போட்டியிட்ட நிலையில், இரண்டு தொகுதிகளிலும் அவர் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில், காங்கிரஸ் முன்னிலை வகித்தது. சிறிது நேரத்தில், ஆளும் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா இடையே கடும் இழுபறி ஏற்பட்டது. முன்னணி நிலவரம் நிமிடத்துக்கு, நிமிடம் மாறிக்கொண்டே உள்ளது.
இதனால், எந்த கட்சி பெரும்பான்மை பெறும் என்பதை கணிக்க முடியாத நிலையே உள்ளது. முன்னிலை நிலவரம் தெரிய வந்த 209 தொகுதிகளில் 89 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையும் 91 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி முன்னிலையும் வகிக்கின்றன. ஜேடிஎஸ் 26 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
இந்நிலையில் கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா சாமூண்டீஸ்வரி மற்றும் பதாமி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில், இரு தொகுதிகளிலும் சித்தராமையா பின்னடவை சந்தித்துள்ளார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஜேடிஎஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜிடி தேவேகவுடா முன்னிலை வகிக்கிறார்.