
சசிகலா தற்காலிக பொதுச்செயலாளர்தான் எனவும், விரைவில் பொதுச்செயலாளருக்கான தேர்வு நடத்தப்படும் எனவும் துணை சபாநாயகரும், அதிமுக எம்.பியுமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவையடுத்து சசிகலா பொதுச்செயலாளராகவும் ஓ.பி.எஸ் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர். பின்னர், முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க முயற்சி மேற்கொண்டதால் அதிமுக சசிகலா அணி ஓ.பி.எஸ் அணி என இரண்டாக பிளவடைந்தது.
இதற்கான விளக்கங்களும் கோரிக்கைகளும் நிறைவு பெற்ற நிலையில், வரும் 20 ஆம் தேதிக்குள் சசிகலா நியமனம் குறித்து இறுதி முடிவு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சசிகலா தரப்பு ஆதரவாளரான தம்பிதுரை தலைமையிலான 10 பேர் அடங்கிய குழு இன்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தது.
இந்த சந்திப்பின் போது சசிகலா நியமனம் தொடர்பாகவும், இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரும் அதிகாரம் சசிகலாவுக்குதான் உள்ளது எனவும் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் மனு அளித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது பற்றி ஆவணங்களை தேர்தல் ஆணையங்களிடம் அளித்துள்ளோம்.
ஜெயலலிதாவையும் அதிமுக பொதுக்குழு தான் பொதுச்செயலாளராக தேர்வு செய்ததாக தலைமை தேர்தல் ஆணையரிடம் தெரிவித்தோம்.
இரட்டை இலை சின்னத்தை பன்னீர்செல்வம் அணி கேட்பது நியாயமல்ல.
அதிமுகவில் எந்த பிளவும் ஏற்படவில்லை.
சசிகலா இடைக்கால பொதுச்செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விரைவில் பொதுச்செயலாளர் தேர்வு நடத்தப்படும்.
இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார்.